வளர்ப்பு மகனைப் பலமுறை துன்புறுத்திய குற்றத்துக்காக நேற்று மாது ஒருவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிலிருந்து விலகிய அந்த 44 வயது மாது, தனியார் துணைப்பாட ஆசிரியராக பணிபுரிந்தபோது இக்குற்றங்களைச் செய்ததாகக் கூறப்பட்டது.
சிறுவனைத் துன்புறுத்தியதன் தொடர்பில் மாது சென்ற மாதம் ஒப்புக்கொண்டதை அடுத்து தண்டனை விதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்குத் தற்போது 15 வயது. 11 வயதிலிருந்து எத்தகைய வன்முறைக்குச் சிறுவன் ஆளானான் என்பது குறித்து நீதிமன்றத்தில் கூறப்பட்டது. அவ்வாறு 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஒரு சம்பவத்தில் சாப்பிட்ட பின் தட்டைக் கழுவாத சிறுவன் மீது கோபங்கொண்ட மாது, அவன் தலையின் பின்புறத்தில் பீங்கான் குவளை கொண்டு அடித்தார். மறுநாள் கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்குச் சென்ற சிறுவனுக்குத் தையல் தேவைப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு சம்பவத்தில், சிறுவனுக்கு வழங்கப்பட்ட ‘நன்னடத்தை விருது’ சான்றிதழை மாது கிழித்தார். அந்த விருதுக்குச் சிறுவன் தகுதியற்றதாகக் கூறியிருந்தார். இச்சம்பவங்கள் நடந்தபோது சிறுவன் தன் தந்தை, வளர்ப்புத் தாயான அந்த மாது மற்றும் அவரது மகள் ஆகியோருடன் வசித்து வந்ததாக அறியப்படுகிறது.
2017ஆம் ஆண்டு மே 19ஆம் தேதியன்று சிறுவனால் ஆங்கிலமொழித் தேர்வுக் கேள்வி ஒன்றை நினைவுகூர முடியாதபோது மாது சிறுவனைப் பலமுறை அறைந்தார்.
மறுநாள் சிறுவனைப் பார்க்க வந்த ஓர் உறவினர், காயங்களைக் கண்டார்.
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதில் இரண்டு கன்னங்களிலும் காயங்கள் இருந்ததுடன் ஒரு பல்லும் சற்று சேதமடைந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலிசார் விசாரணை மேற்கொண்டனர். துன்புறுத்தல் ஓராண்டு காலத்திற்கு நின்றது.
ஆனால் மறுபடியும் 2018ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதியன்று மாது சிறுவனின் மூக்கைக் குத்தியதில் ரத்தம் கசியத் தொடங்கியது. மீண்டும் வீட்டு வேலை தொடர்பான ஒரு விவகாரத்திற்கு மாது இவ்வாறு செய்திருந்ததாகக் கூறப்பட்டது.
ஒரு வாரம் கழித்து அடுத்த சம்பவம் நடந்தது. பள்ளியில் துணைப்பாட வகுப்புக்குச் செல்லாததால் சிறுவனைப் பலமுறை அறைந்தார் மாது. சிறுவனின் காயங்களைக் கவனித்த ஆசிரியர் இது குறித்துப் பள்ளித் துணை முதல்வரிடம் தெரிவித்தார்.
போலிசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜூலை 30ஆம் தேதியன்று மருத்துவமனைக்குச் சிறுவன் கொண்டு செல்லப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது சிறுவனின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாக மறு மாதம் வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. வளர்ப்பு மகனைக் கண்டிக்கவே தான் இக்குற்றங்களைப் புரிந்ததாக மாது கூறியிருந்ததைத் தண்டனை விதிப்புக்கு முன் நீதிபதி குறிப்பிட்டார். இருப்பினும் சிறுவனுக்கு எதிராக மாது இழைத்த கொடுமையையும் சிறுவனுக்கு ஏற்படுத்தப்பட்ட காயங்களையும் வைத்துப் பார்க்கையில் மாது கூறுவது ‘ஏற்றுக்கொள்ள முடியாத’ காரணம் என்று சுட்டினார் நீதிபதி.
சிறுவன் மன்னித்துவிட்டதாகக் கூறித் தம் கட்சிக்காரருக்கு அபராதம் விதிக்குமாறு தற்காப்பு வழக்கறிஞர் கோரினார்.
மாது தற்போது $8,000 பிணைத் தொகையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நவம்பர் 6ஆம் தேதியன்று அவர் தன் சிறைவாசத்தைத் தொடங்குவார்.