சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு ஆற்றல்களை வலுப்படுத்துவதற்கு ஆராய்ச்சியும் புத்தாக்கமும் மிக முக்கியம் என்று கூறியுள்ளார் தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சர் ஜனில் புதுச்சேரி.
அத்தகைய முயற்சிகளை சிங்கப்பூர் தீவிரப்படுத்தி வருவதாகக் கூறிய டாக்டர் ஜனில், புதிதாகத் தொடங்கவுள்ள ஓர் ஒத்துழைப்புத் திட்டம் குறித்தும் அறிவித்தார்.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்புக்கும் இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான இந்த கூட்டு மானியத் திட்டம், தேசிய இணையப் பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்டு உள்ளது.
மானியத் திட்டத்தின்கீழ் சிங்கப்பூரின் ஆய்வாளர்கள் தங்களின் பங்காளிகளுடன் இணைந்து, அறிவார்ந்த தேசங்களுக்கான பாதுகாப்பு, பொருள் சாதனங்களின் இணையம் போன்ற சவால்மிக்க அம்சங்களைக் கையாள்வர்.
உயர்கல்விக்கான உள்ளூர்க் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கழகங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த மானியத் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேசிய இணையப் பாதுகாப்பு ஆய்வு மேம்பாட்டுத் திட்டத்திற்கு சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு பொறுப்பேற்கும்.
இதன் மூலம் அரசாங்க அமைப்புகள், தொழில்துறைகள் மற்றும் கல்வியாளர்கள் மேலும் சுமுகமாக ஒருங்கிணைந்து செயல்படலாம் என்பது நோக்கமாகும்.
“இன்றைய இணையச் சவால்களை சமாளிப்பதற்கு இடையே, நாளைய இணைய மிரட்டல்களுக்குத் தயாராவதும் முக்கியமாகும்,” என்று சேன்ட்ஸ் எக்ஸ்போ மற்றும் மாநாட்டு மையத்தில் நடந்த நிகழ்வில் அமைச்சர் ஜனில் குறிப்பிட்டார்.
புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருவதால் பற்பல நல்ல வேலைவாய்ப்புகளும் உருவாகும் என்றார் அவர்.
பொருள் சாதனங்களின் இணையம் குறித்துப் பேசிய டாக்டர் ஜனில், அவற்றின் பாதுகாப்பு இரட்டிப்பாக வேண்டுவதன் அவசியத்தை வலியுறுத்தினார். இத்தகைய சாதனங்கள் தற்போது உலகில் 31 பில்லியன் உள்ளன.
ஆனால் 2030ஆம் ஆண்டுக்குள் அந்த எண்ணிக்கை 75 பில்லியனாகலாம்.
இச்சாதனங்கள் மூலம் இணைப்பாற்றல் அதிகரிக்கும். ஆனால் மேலும் பெரிய அபாயங்களும் உருவாகக்கூடும் என்று அமைச்சர் ஜனில் எச்சரித்தார்.