உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் கடந்த சில மாதங்களில் கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்த 700க்கும் மேற்பட்டோரின் சடலங்களைத் தகனம் செய்துள்ளார்.
இதுகுறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து ஏராளமானோர் அவருக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
முன்னா, வயது 35, என்ற அத்தொழிலாளி லக்னோவில் குடும்பத்துடன் வசிக்கிறார். கொவிட்-19 நோய் தொற்றி இறந்தவர்களைத் தகனம் செய்யும் பணிக்கு ஆட்கள் தேவை என அரசு அறிவிப்பு வெளியானதும் லக்னோவில் இருந்து முதலில் விண்ணப்பித்தது இவர்தான். கடந்த ஏப்ரல் மாதம் பணியில் அமர்த்தப்பட்டது முதல் இன்று வரை ஏராளமானோரின் உடல்களைத் தகனம் செய்து வருவதாகக் கூறுகிறார்.
தினந்தோறும் இவரிடம் ஒப்படைக்கப்படும் உடல்களை மின்மயானத்துக்குக் கொண்டு சென்று தகனம் செய்வதுதான் இவரது பணி. கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் செல்லவே பலர் அஞ்சும் நிலையில் இவர் அத்தொற்றால் இறந்தவர்களின் உடல்களைத் தினமும் கையாள்கிறார். தற்போது தினந்தோறும் 12 முதல் 17 உடல்களைத் தகனம் செய்யவேண்டி உள்ளதாகச் சொல்கிறார்.
“இந்தப் பணியைச் செய்ய எங்களைப் போன்ற சிலரை கடவுள் தேர்வு செய்ததாக நினைக்கிறேன். இதற்காக வெட்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்துள்ள எனக்கு இந்தப் பணியால் சில பிரச்சினைகள் ஏற்படும் என்பது நன்கு தெரியும். எனினும் மனதார இப்பணியைச் செய்து வருகிறேன்,” என்கிறார் முன்னா.
கடந்த ஆறு மாதங்களாக இவர் தமது குடும்பத்தாரை தூரத்தில் நிற்க வைத்துதான் சந்திக்கிறார். தம்மால் அவர்களுக்குக் கிருமி தொற்றிவிடக்கூடாது என்பதில் முன்னெச்சரிக்கையாக உள்ளார்.
“நான் செய்யும் பணிக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளது. சில சமயம் உடல்களைத் தகனம் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடும். அதற்காக சிலர் எங்களை ஏசுகிறார்கள். ஆனால் பதிலுக்கு நாங்கள் கோபப்படுவதில்லை. இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது,” என்கிறார் முன்னா.
கடந்த ஏப்ரல் முதல் இதுநாள் வரை இவரது குழுவினர் ஒருநாள் கூட விடுப்பு எடுக்கவில்லை என்று பாராட்டுகிறார் லக்னோ மாநகராட்சி மண்டல அதிகாரி திலிப்.
கொவிட்-19 நோய் தாக்கி இறந்தவர்களின் உடல்களை எவ்வாறு கையாள வேண்டும், தனி நபர் பாதுகாப்பு உடைகளை அணிவதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முன்னா மற்றும் அவரது குழுவினருக்கு விரிவாக விளக்கப்பட்டு உரிய பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.