திருச்சியில் மூன்று திருமணங்களை மறைத்து நான்காவதாக திருமணம் செய்த போலிஸ்காரரின் மகனைப் போலிசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சியைச் சேர்ந்தவர் ஆயுதப்படை காவலர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக், 26, தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த சுமதி, 20, என்ற பெண்ணைக் காதலித்து கடந்த 2019ல் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்துக்குப் பின்னர் இருவரும் திருவெறும்பூர் பகுதியில் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இதைத்தொடர்ந்து, சுமதி மூன்று முறை கர்ப்பம் தரித்து மூன்று முறையும் கார்த்திக் சொன்னதால் கலைத்துவிட்டார்.
அத்துடன், சுமதியின் 20 பவுன் நகைகளையும் கார்த்திக் அடமானம் வைத்து ஏமாற்றி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு வந்துள்ளது.
இதையடுத்து, கணவர்மீது சந்தேகப்பட்ட சுமதி, அவரது கைபேசியை எடுத்துப் பார்த்தார்.
அப்போது, பல பெண்களுடன் கார்த்திக் சேர்ந்திருக்கும் புகைப்படங்களைக் கண்டு சுமதி அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கார்த்திக்கிடம் கேட்டபோது, அவர் கூறிய தகவலைக் கேட்டு சுமதி தலைசுற்றிப் போனார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருச்சியைச் சேர்ந்த ஸ்டெல்லா என்ற பெண்ணை கார்த்திக் முதல் திருமணம் செய்துள்ளார்.
அதன்பின்னர் சென்னையைச் சேர்ந்த வாணியை இரண்டாவதாகவும் அதே பகுதியைச் சேர்ந்த மீனாவை மூன்றாவதாகவும் திருமணம் செய்ததாகத் தெரிவித்தார்.
முதல் மனைவி ஸ்டெல்லாவிற்கு 4 வயதில் மகனும் 2வது மனைவி வாணிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளதாகவும் கார்த்திக் கூறினார்.
இதனால் அதிர்ந்த சுமதி, லால்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.