காபூல்: ஆப்கானிஸ்தானில் வடக்கே உள்ள குண்டூஸ் நகரைக் கைப்பற்ற தலிபான் போராளிகள் ஒருங்கிணைந்த தாக்குதல்களைத் தொடங்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரின் நாலா பக்கங்களிலிருந்தும் போராளிகள் தாக்குதல் நடத்தி வருவதாகக் கூறப்பட்டது. அத்தாக்குதலை எதிர்த்து அரசாங்கப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி வருவதாக மாநில ஆளுநரின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார். கடந்த ஆண்டு குண்டூஸ் நகரம் தலிபான் போராளிகள் வசம் வீழ்ந்தது. ஆனால், அரசாங்கப் படையினர் அதனை மீண்டும் கைப்பற்றினர். குண்டூஸ் பகுதியிலும், தெற்கில் உள்ள ஹெல்மண்ட் பகுதியிலும் போராளிகள் முன்னேறி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நகரின் பல பகுதிகளை போராளிகள் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்படும் வேளையில் அவர்களை எதிர்த்து அரசாங்கப் படையினர் கடுமையாக சண்டையிட்டு வருவதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
போராளிகளிடம் இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்ற உறுதியான நடவடிக்கை களை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஆப்கான் அரசாங்கம் கூறுகிறது. ஆப்கான் பாதுகாப்புப் படையினருக்கு நேட்டோ படைகள் உதவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.