அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறித்த வருத்தத்தில் இருந்த 33 வயதான புஸ்ஸா கிருஷ்ணா எனும் இந்தியர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தார்.
தெலங்கானா மாநிலம், ஜனகாமா மாவட்டம், புச்சண்ண பேட்டை மண்டலம், கொண்ணா கிராமத்தை சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணா.
அதிபர் டிரம்பின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த அவர், டிரம்புக்கு 6 அடி உயரத்தில் சிலை செய்து வைத்து தினமும் பூசை செய்து வந்ததார்.
டிரம்பின் புகைப்படம் பொறிக்கப்பட்ட டி-சட்டையை அடிக்கடி அணியும் கிருஷ்ணாவை அந்தப் பகுதி மக்கள் ‘டிரம்ப் கிருஷ்ணா’ என்றே அழைத்து வந்தனர்.
திரு டிரம்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது முதல் சரிவர சாப்பிடாமல் மிகுந்த வருத்தத்துடன் இருந்ததாக அவரது உறவினரான வெங்கட் கோட் என்பவர் குறிப்பிட்டார். கடந்த பிப்ரவரியில் திரு டிரம்ப் இந்தியாவுக்கு வந்தபோது அவரைச் சந்திக்க மிகுந்த முயற்சி எடுத்த கிருஷ்ணா, அந்த ஆசை நிறைவேறாமலே இறந்துபோனது வருத்தமளிக்கிறது என்றார் அவர்.
திரு டிரம்ப் கொரோனா பிடியிலிருந்து விடுபட வேண்டும் என்ற கோரிக்கையுடன் காணொளி ஒன்றைப் பதிவு செய்து நண்பர்களிடையே பகிர்ந்தார் கிருஷ்ணா.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனாவின் பிடியிலிருந்து விடுபட்ட திரு டிரம்ப், தற்போது தேர்தல் பிரசாரத்திலும் பங்கெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்த கிருஷ்ணாவின் மனைவி கடந்த ஆண்டு பிரசவிக்க முடியாமல் உயிரிழந்தார். கிருஷ்ணாவும் உயிரிழந்துள்ள நிலையில், அவரது 7 வயது மகன், கிருஷ்ணாவின் பெற்றோரின் பராமரிப்பில் இருக்கிறார்.