நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் வேளையில், பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, சமூக நலத்துறை செயலாளர் மதுமதி அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதில், இத்திட்டத்தின் கீழ் 14,96,00,000 ரூபாயுடன், சமூக நலத்துறை சார்பில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வங்கிக் கணக்கில் முதற்கட்டமாக பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு இழப்பீடு வழங்கும் திட்டத்திற்கு 2 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.
பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாகும் குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.