புதுடெல்லி: இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வங்கிக் கணக்கு களை முடக்கவில்லை, மாநில கிரிக்கெட் வாரியங்கள் தொடர்புடைய இரண்டு பரிவர்த்தனைகளை மட்டுமே நிறுத்துமாறு வங்கிகளுக்கு அறி வுறுத்தப்பட்டதாக லோதா குழு விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக பிசிசிஐயின் செயல்பாடு, நிர்வாகத்தில் சில சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்த லோதா குழு அதனை அமல்படுத்த உச்ச நீதிமன்ற உத்தரவையும் பெற்றது. ஆனால் பிசிசிஐ இன்னமும் பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெற்ற சிறப்புப் பொதுக்கூட்டத்தில் மாநில வாரியங்களுக்கு நிதியளிக்குமாறு வங்கிகளுக்கு அறி வுறுத்தி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எனப்படும் பிசிசிஐ முடிவெடுத்தது. இது லோதா குழுவின் பரிந்துரைக்கு எதிரானது என்பதால், மாநில வாரியங்களுக்குப் பெரிய தொகையைக் கைமாற்ற வேண்டாம் என்று பிசிசிஐ கணக்கு வைத்திருக்கும் வங்கிகளுக்கு என்று லோதா குழு மின்னஞ்சல் மூலம் அறிவுறுத்தியிருந்தது. ஏனெனில் அது உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மீறியதாகும் என வங்கிகளை அது எச்சரித்தது.
இதனையடுத்து பிசிசிஐயின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதாக செய்திகள் எழுந்தன. வங்கிக் கணக்குகளை லோதா குழு முடக்கியதாக கருதிய பிசிசிஐ, நியூசிலாந்துக்கு எதிரான நடப்புத் தொடரை மட்டுமல்லாமல் அனைத்து உள்ளுர், அனைத்துலக போட்டிகளையும் ரத்து செய்வதாக மிரட்டியது. "போட்டிகளை நடத்த வாரியத்திற்கு நிதி தேவை. இது இப்படித்தான் போகும் என்றால் நடப்பு நியூசிலாந்து தொடரை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை," என்று வாரியம் கூறியதாகத் செய்திகள் தெரிவிக் கின்றன. இதனையடுத்து விளக்கம் அளித்த குழுத் தலைவர் லோதா, "பிசிசிஐ வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை. பிசிசிஐ சிறப்புக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது போல் மாநில கிரிக்கெட் வாரியங்களுக்குப் பெரிய தொகைகளை அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தோம். வழக்கமான செலவுகளுக்கு எந்தவித தடையும் இல்லை," என்றார்.