சிங்கப்பூரைச் சேர்ந்த வலைப் பதிவாளர் ஏமஸ் யீ, 20, ஒரு சிறுமிக்கு ஆபாச புகைப்படங்கள், குறுஞ்செய்தி அனுப்பியதன் தொடர்பில் இல்லினாய்ஸ் நீதிமன்றத்தில் அவர் மீது நேற்று (அக்டோபர் 16) குற்றம் சாட்டப்பட்டது.
சமய ரீதியாக உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக கடந்த 2015, 2016 ஆண்டுகளில் சிங்கப்பூரில் இரு முறை சிறைத் தண்டனை அனுபவித்த ஏமசுக்கு 2017ஆம் ஆண்டில் அமெரிக்கா அடைக்கலம் அளித்தது. அப்போதிலிருந்து அவர் சிகாகோவில் வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு எப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில், ஒரு 14 வயது சிறுமிக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதாகவும் அந்தச் சிறுமியின் நிர்வாண புகைப்படத்தைக் கேட்டுப் பெற்றதாகவும் ஆயிரக்கணக்கான குறுஞ்செய்திகளை அவருக்கு ஏமஸ் அனுப்பியதாகவும் சிகாகோ சன் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதையடுத்து, சட்ட உதவியை நாடினார் அந்தச் சிறுமி.
நேற்று நீதிமன்றத்தில் முன்னிலையான ஏமசுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (S$1.36 மில்லியன்) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஏமஸ், வழக்கு விசாரணைக்காக காத்திருக்கும் வேளையில் இணையத்தைப் பயன்படுத்த அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏமசின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அங்கிருந்து அவர் நாடுகடத்தப்படலாம். அடுத்த மாதம் 5ஆம் தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்.