லடாக் உள்ளிட்ட எல்லைப் பகுதியில் அமைதியான சூழலை ஏற்படுத்த இந்தியா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், எல்லையில் அமைதிக்குப் பாதிப்பு ஏற்பட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவும் பாதிக்கப்படும் என்றார்.
கடந்த ஜூன் மாதம் எல்லையில் இந்தியா, சீனா இடையே நிகழ்ந்த மோதல்கள் பொது மற்றும் அரசியல் தளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக இருதரப்புக்கும் இடையேயான உறவு மோசமடைந்துள்ளதாக தெரிவித்தார்.
“கடந்த முப்பது ஆண்டுகளில் சீனாவுடன் ஓர் இயல்பான உறவை இந்தியா வளர்த்து வந்தது. இந்த உறவின் அடிப்படையே, எல்லைப் பகுதியில் அமைதியையும் ஒழுங்கையும் பேணுவதுதான்.
“1993 முதல் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் ராணுவப் படைகளைக் குறைத்து அமைதியை ஏற்படுத்தும் பல ஒப்பந்தங்கள் உள்ளன. மேலும் எல்லைகளை எவ்வாறு பராமரிப்பது மற்றும் எல்லையில் துருப்புக்களை எவ்வாறு நிறுத்துவது என்பதை இந்த ஒப்பந்தங்கள் தீர்மானிக்கின்றன,” என்று அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் இருதரப்புக்கும் இடையேயான ஒப்பந்தங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், எல்லையில் அதிக எண்ணிக்கையிலான சீன துருப்புக்களை நிறுத்துவது ஒப்பந்தத்துக்கு முரணானது என்றார்.
எதனால் சீனா, இந்திய படைகள் மீது தாக்குதல் நடத்தியது என்பதற்கான விளக்கம் தம்மிடம் இல்லை என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், தற்போது எல்லையில் உள்ள ஏராளமான வீரர்கள் ஆயுதங்களை வைத்திருக்க நேரிட்டுள்ளது என்றும் தற்போதைய சூழல் நாட்டின் பாதுகாப்பு அம்சத்துக்கான சவால் என்றும் கூறினார்.
இந்திய நிலப்பகுதியின் ஓர் அங்குலத்தைக் கூட சீனாவுக்கு விட்டுத் தராது முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். போருக்கு சீனா தயார் என்றால், இந்தியாவும் எப்போதுமே தயார் என்றும் அவர் சீன அதிபரின் அண்மைய பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.