இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாக இருந்தது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்க இருந்தார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.
படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் இல்லை என ‘800’ படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கெனவே உறுதி அளித்தது. இருப்பினும் ஈழத்தமிழர்களுக்கு எதிரானவர்களுக்கு முத்தையா முரளிதரன் ஆதரவளித்தவர் என்பதால் படத்தில் நடிக்கும் முடிவை விஜய் சேதுபதி கைவிட வேண்டும் என இயக்குநர் பாரதிராஜா, சேரன் பாடலாசிரியர் வைரமுத்து, தாமரை உள்ளிட்டோர் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்து முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதற்கு டுவிட்டரில் பதிலளித்த விஜய் சேதுபதி, முரளிதரனின் அறிக்கையைக் குறிப்பிட்டு “நன்றி வணக்கம்,” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது.