மலேசியாவில் அவசரநிலை நடவடிக்கைகள் அறிவிப்பது தொடர்பில் பேச, மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நேற்று மாலை மாமன்னர் சுல்தான் அப்துல்லா அகம்மது ஷாவை குவாந்தான், பாஹாங்கில் சந்தித்தார்.
மாமன்னரின் அனுமதியுடன் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தும் அதிகாரத்தைத் தாம் பெற, பிரதமர் இச்சந்திப்பை நிகழ்த்தியதாகக் கூறப்படுகிறது.
மலேசிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள 2021 வரவுசெலவுத் திட்ட அமர்வு, திடீர் தேர்தலுக்கு வழி விட்டுவிடக் கூடாது என்பதற்காக நேற்று காலை நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் அவசரகால நடவடிக்கைகள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. சாபாவில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து மலேசியாவில் முன்னர் காணாத அளவில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த வாரத்தில் பலமுறை நாள் ஒன்றுக்கு 800க்கும் மேற்பட்ட புதிய தொற்று சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன.
இவ்வாறு மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று அலை மீண்டும் எழும் நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாங்கம் அதன் செலவினத்தைத் திட்டமிடுவதை உறுதிசெய்ய வேண்டுமே தவிர, மேன்மேலும் தடுமாறும் அரசியல் சூழலால் அது பாதிப்படையக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. இதற்காக ‘பொருளியல் அவசரகால நிலை’ அறிவிக்கப்படலாம் என்று ‘தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ நாளிதழுக்குத் தெரிவிக்கப்பட்டது.
“1969 இனக் கலவரங்களுக்குப் பிறகு விதிக்கப்பட்ட ஊரடங்கு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவப் படைகள் போன்ற சூழ்நிலை இருக்காது. மாறாக, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைப்படி இயல்பு வாழ்க்கை தொடரும். சுகாதார நெருக்கடி ஒன்றைச் சமாளிப்பதில் அரசியல் குறுக்கிடாது,” என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு நம்பகமான நபர் தெரிவித்தார். அமைச்சரவைக் கூட்டத்தில் ஆயுதப் படைத் தலைவர், அரசாங்கத் தலைமை போலிஸ் அதிகாரி, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிருமிப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும்வரை தேசிய அளவிலான தேர்தல்கள் நடக்காததை உறுதிசெய்ய வேண்டும் என்று உயர்மட்டக் கூட்டங்களின்போது சுகாதார அதிகாரிகள் வலியுறுத்திக் கூறியிருந்தனர். இதன் தொடர்பில் இவ்வாரத் தொடக்கத்தில் இந்த மூவரிடமும் ஆலோசனை பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தும் அதிகாரத்தை வழங்குமாறு அமைச்சரவை எடுத்த முடிவு, பின் நேற்று பகல் தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக உயர் மட்ட அமைச்சரவை உதவியாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
“வரவுசெலவுத் திட்டம் 2021 அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக சிறப்பு அமைச்சரவை கூட்டம் நடந்தது. இனி மாமன்னருடன் பிரதமர் பேசுவதற்கு நாம் காத்திருக்க வேண்டும்,” என்றார் அவர்.
இதையடுத்தே அவசரநிலை குறித்து அறிவிப்பதற்கு அனுமதி கோர, பிரதமர் முகைதீன் மலேசிய மாமன்னரைச் சந்தித்து இரண்டு மணி நேரம் பேசினார்.
விதிமுறை 150ன் கீழ் மாமன்னரின் அனுமதியுடன் மத்திய அரசியலமைப்பின்படி அவசரநிலை அறிவிக்கப்படலாம். அவ்வாறு அறிவிக்கப்பட்டால் நாடாளுமன்றம் நிறுத்தி வைக்கப்படும். அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அதிகாரம் ஒப்படைக்கப்படும். அதன்படி விதிமுறைகளை உருவாக்குவதும் பொதுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான செலவினத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் முடியும்.