மலேசியாவில் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள கிருமித் தொற்று முன்களப் பணியாளர்ளையும் பதம் பார்த்துள்ளது.
போலிசார் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களில் பலர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 10,000க்கும் மேற்பட்ட போலிசார் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் 200க்கும் மேற்பட்ட போலிசாருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பெருமளவு போலிசார் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதுகாப்புப் பணியில் மிகப் பெரிய தொய்வு ஏற்படும் என அஞ்சப்படு கிறது.
போலிஸ் படைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை உறுதிப்படுத்திய உள்துறை அமைச்சர் ஹம்சா சைனூதீன், மனிதவளமும் அவர்களுடைய பணியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
போலிஸ் வேலையின் தன்மை காரணமாக அவர்கள் கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்படுவதாக அவர் சொன்னார்.
“பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கிருமிப்பரவல் ஏற்பட்டது.
“அதன் பிறகு ஏழே மாதங்களில் 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தற்போதைய 3வது கிருமிப்பரவல் அலையில் இரண்டே வாரங்களில் 11,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று அமைச்சர் சொன்னார்.
மலேசியர்கள் அனைவரும் கிருமித்தொற்றுக்கு எதிராக இணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், இதை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
இதற்கிடையே டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அவர் முன்கள ஊழியர்களைப் பாராட்டியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிராக இரவு பகலாகப் போராடி வரும் உங்களை நம்பித்தான் நாடே இருக்கிறது என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட போலிசாரில் எத்தனை பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவில்லை.
இன்னும் சோதனை முடிவுகள் வெளி வர வேண்டி உள்ளது.
அதன் பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என்று அரசு தரப்பு தகவல்கள் கூறுகின்றன.