திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயிலில் உள்ள ‘காந்திமதி’ எனும் யானையின் வயது முதிர்வு காரணமாக அதன் எடையைக் குறைக்க வேண்டும் என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
தற்போது காந்திமதிக்கு 51 வயதாகிறது. கடந்த ஆண்டு இறுதியில் யானையின் எடை 4,450 கிலோவாக இருந்தது.
யானையின் உடல் வெப்பநிலை, உணவு உட்கொள்ளும் திறன், சுவாசிக்கும் திறன், வெளியேற்றும் கழிவுகளின் நிலை, வெளிப்புற தோலின் தன்மை உள்ளிட்டவை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உரிய ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர்.
அவற்றின் அடிப்படையில் உணவு கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டன.
பக்தர்கள் சார்பில் வெல்லம், தேங்காய், பழம் உள்ளிட்டவற்றை கொடுக்க தடை விதிக்கப்பட்டது.
கோரைப்புல் உள்ளிட்டவை தினமும் 75 முதல் 150 கிலோ வரை கொடுக்கப்படுகின்றன.
கோயிலின் 4 ரத வீதிகள் வழியே தீர்த்தம் எடுத்து வர யானை அழைத்துச் செல்லப்படுவதுடன் வெளிப்பிரகாரத்தில் 10 முதல் 20 முறை நடைப்பயிற்சிக்கும் பாகன்கள் அழைத்துச் செல்கின்றனர்.
“இத்தகைய நடவடிக்கைகளால் கடந்த 9 மாதங்களில் மட்டும் காந்திமதியின் எடை 300 கிலோ குறைந்து, தற்போது 4,150 கிலோவாக உள்ளது. யானை மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது,” என யானையைப் பரிசோதிக்கும் மருத்துவர் குறிப்பிட்டார்.
காந்திமதியின் வயதுக்கேற்ற எடையாக 3,750 கிலோவுக்கு எடை குறைய வேண்டுமாம். நடைப் பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடுகளும் தொடர்கின்றன.