பணமும் சுற்றமும் அதிகமாக இருந்த காலத்தைக் காட்டிலும் தற்போதைய நிம்மதியே இந்தப் பண்டிகைக் காலத்தில் தமக்குக் கிடைத்துள்ள நிறைவான செல்வம் என்கிறார் சக்கர நாற்காலியின் துணையுடன் வசிக்கும் திருவாட்டி வள்ளியம்மை சக்தியப்பன், 61 (மேல்படம்).
கடந்த பத்தாண்டுகளாக கெபுன் பாருவில் ஈரறை வீட்டில் தனியே வசித்து வரும் திருவாட்டி வள்ளியம்மை, "தீபாவளிதோறும் நான் கோவிலுக்குச் செல்வேன். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களைக் காணும்போது சிரித்துப் பேசுவேன். என் சமையலை விரும்புவோருக்கு சமைத்தும் தருவேன்," என்றார்.
சிலேத்தார் ராணுவ முகாமில் முன்பு சமையல் வல்லுநராகப் பணியாற்றிய திருவாட்டி வள்ளியம்மைக்கு 2010ல் வேலையிடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டது. ஏற்கெனவே நீரிழிவு பாதிப்பும் இருந்ததால், 2014ல் இவரது இடதுகால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
தாதிமை இல்லத்தினர் வாரம் இருமுறை தம் வீட்டிற்கு வந்து உடல்நல பரிசோதனை செய்வதுடன், வீடு துடைத்து உதவுவதாகவும் இவர் சொன்னார்.
"மற்ற நேரங்களில் நான்தான் என் வீட்டு வேலைகளைச் செய்வேன். இயந்திர சக்கர நாற்காலி மூலமாக வெளியே சென்று மளிகைப் பொருள்களை வாங்குவேன், கட்டணங்களைச் செலுத்துவேன்," என்று இவர் தெரிவித்தார்.
பெற்றோரும் உடன்பிறந்தோர் நால்வரும் இறந்துவிட்ட நிலையில், தம் குடும்பத்தில் உயிருடன் இருப்பது தாம் மட்டுமே என்றார் திருவாட்டி வள்ளியம்மை. 28 ஆண்டுகளுக்கு முன் மணவிலக்கு பெற்ற இவர், முன்னாள் கணவருடனும் பிள்ளைகள் இருவருடனும் தொடர்பில் இல்லை.
ஒருகட்டத்தில் வாழ்க்கை வெறுத்துப்போனதால் உயிரையே மாய்த்துக்கொள்ளத் துணிந்தார் இவர். ஆயினும், மருத்துவர்களின் ஆலோசனையும் இறைபக்தியும் அதிலிருந்து இவரை மீட்டன.
அடிக்கடி கோவிலுக்குச் செல்லும் இவர், சில நேரங்களில் பஜனைப் பாடல் குழுக்களிலும் பாடுவார். அத்துடன், விரும்புவோர்க்கு சுவையான சைவ உணவையும் சமைத்துத் தருவார். "பிறருக்குச் சமைத்துத் தருவதில் நான் அளவில்லா இன்பம் அடைகிறேன்," என்கிறார் இவர்.
பரந்த நெற்றியில் அகலமான குங்குமப் பொட்டு, கழுத்தில் உருத்திராட்ச மாலையுடன் காணப்படும் திருவாட்டி வள்ளியம்மைக்கு சிரமங்கள் அதிகம் இருந்தாலும் இவரது மலர்ந்த முகம் காண்போரையும் மகிழச் செய்கிறது. இப்போதைய சூழலில் பலரும் சிரமப்பட்டு வந்தாலும் தற்காலிகமாக அதனை மறந்து தீபாவளியைக் கொண்டாடுங்கள் என்பதே இவரது அறிவுரை.
செய்தி: கி.ஜனார்த்தனன்