கொவிட்-19 கிருமித்தொற்றை முறியடிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டுள்ள நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை நான்கு மாநிலங்களில் மலேசியா தளர்த்தவிருக்கிறது.
ஜோகூர், கெடா, மலாக்கா, திரங்கானு ஆகிய அந்த மாநிலங்களில் நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. முன்னதாக டிசம்பர் 6ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் கிளந்தான் மாநிலத்தில் முடக்கநிலை அறிவிக்கப்படுகிறது.
அம்மாநிலத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் கொவிட்-19 பரிசோதனையை அவசியம் செய்யவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டுள்ளது.
அங்கு வேகமாகப் பரவிவரும் நோயால் இந்தக் கட்டுப்பாடு இன்று முதல் செயல்படும் என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 9ஆம் தேதி நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மலேசியாவின் 13 மாநிலங்களில் ஒன்பதில் செயல்படுத்தியது.
தலைநகர் கோலாலம்பூர் உட்பட பல மாநிலங்களில் வெளிநாட்டு ஊழியர்கள் கொவிட்-19 பரிசோதனைகளுக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.