இளைஞர் மீது பொய்யாக பாலியல் வன்கொடுமை புகார் அளித்து சிறையில் தள்ளியதற்காக, இளைஞருக்கு 15 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று ஒரு பெண்ணுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் முடிவெடுத்திருந்த நிலையில், நிலத்தகராறு காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக, சந்தோஷின் குடும்பம் வேறு பகுதிக்கு இடம்பெயர்ந்தது.
தனியார் பொறியியல் கல்லூரியில் சந்தோஷ் படித்துக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய மகளை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகக் கூறி, அவருக்கு ஏற்கனவே திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்த பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், 95 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தோஷுக்கு பிணை வழங்கப்பட்டது. இதனிடையே சந்தோஷுக்கு எதிராக புகார் அளித்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்தது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில், புகார் அளித்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என மரபணு சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தோஷ் விடுதலை செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, தன் மீது பொய் புகார் அளித்து சிறையிலடைத்த பெண்ணிடம் 30 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் சந்தோஷ். பொய் புகாரில் தான் சிறை சென்றதால், தன்னுடைய படிப்பை தான் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட சந்தோஷ், பொறியாளராக வேண்டிய தாம், இப்போது அலுவலக உதவியாளராகப் பணியாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.