ஜுவல் சாங்கி விமான நிலையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கோலாகலமாகத் திறக்கப்பட்டது. அதைக் கட்டி முடிக்க $1.7 பில்லியன் செலவானது.
திறந்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது.
ஆனால் ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக விமானப் போக்குவரத்துடன் வர்த்தகமும் பொழுதுபோக்கு அம்சங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் ஜுவல் வளாகம் வெறிச்சோடிக் கிடக்கிறது. லாபம் ஈட்டலாம் என மிகுந்த நம்பிக்கையுடன் கடைகளைத் திறந்த நிறுவனங்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
மக்களின் வரவு வெகுவாகக் குறைந்திருப்பதால் வர்த்தகத்துக்குப் பலத்த அடி.
நிலைமையைச் சமாளிக்க முடியாமல் அங்குள்ள சில சில்லறை, வர்த்தக நிறுவனங்கள் விலகிவிட்டன.
ஜுவலில் மொத்தம் 280க்கும் மேற்பட்ட உணவு, பானக் கடைகள் உள்ளன. ஜுவலின் உணவு நிலையத்தில் கிட்டத்தட்ட 15 கடைகள் மூடப்பட்டுள்ளன.
எஞ்சியுள்ள வர்த்தகங்களுக்கும் நட்டம் ஏற்பட்டுள்ளது. சுற்றுப்பயணிகளின் வருகைக்காக அவை காத்திருக்கின்றன.
சாங்கி விமான நிலையத்தின் மற்ற முனையங்களிலும் வர்த்தகம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டுக்கான சில்லறை வர்த்தகம் 74 விழுக்காடு குறைந்துள்ளது.
முனையம் 1, 3 ஆகியவை மட்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கான இடத்தில் பாதி அளவு கடைகள் மட்டுமே திறந்துள்ளது.
மேம்பாட்டுப் பணிகளுக்கான முனையம் 2 மூடப்பட்டுள்ளது.
விமானச் சேவைகள் வெகுவாகக் குறைந்திருப்பதால் முனையம் 4ல் அவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கட்டுப்பாட்டுத் தளர்வின் முதல் கட்டத்தில் சாங்கி விமான நிலையத்துக்கு வந்தோரின் எண்ணிக்கையைவிட தற்போது அங்கு வருவோரின் எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்திருப்பதாக ஜுவல் சாங்கி விமான நிலையத்தின் மேம்பாட்டுப் பிரிவின் தலைமை நிர்வாகி திருவாட்டி ஹங் ஜீன் தெரிவித்தார்.
“கட்டுப்பாட்டுத் தளர்வுக்கான இரண்டாம் கட்டத்தின் தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் பயணிகளின் வருகை படிப்படியாக அதிகரித்து வருவது எங்களுக்கு ஊக்கமளிக்கிறது,” என்றார் திருவாட்டி ஹங்.