சீனப் புத்தாண்டை முன்னிட்டு அதிகமானோர் தங்களின் விழாக்காலப் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்னர், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக 50 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போட சீனா திட்டமிட்டுள்ளது.
சுகாதார ஊழியர்கள், காவல் அதிகாரிகள், தீயணைப்பாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள், சரக்குகளைக் கையாள்பவர்கள், போக்குவரத்து மற்றும் தளவாட ஊழியர்கள் போன்ற முன்னுரிமைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இத்திட்டத்தின் கீழ் தகுதிபெறுவர்.
ஆண்டுதோறும் ஒரு வாரக் கொண்டாட்ட விடுமுறையாக இருந்து வரும் சீனப் புத்தாண்டு காலத்தில் கொவிட்-19 கிருமித்தொற்று பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக இக்குறிப்பிட்ட பிரிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் தொடர்பில் ‘சினோஃபார்ம்’, ‘சினோவேக் பயோடெக்’ ஆகிய சீன நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசி மருந்துகளின் 100 மில்லியன் ‘டோஸ்களை’ விநியோகிக்கும் பணிகளில் சீனா இறங்கியுள்ளதாக ‘சவுத் சைனா மார்னிங் போஸ்ட்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘சினோஃபார்ம்’ நிறுவனத்தின் இரு வகை தடுப்பூசி மருந்துகளுக்கும் ‘சினோவேக் பயோடெக்’ நிறுவனத்தின் தடுப்பூசி மருந்துக்கும் அவசரகால பயன்பாட்டு அனுமதியை சீனா வழங்கியுள்ளது.
அத்துடன் நான்காவதாக ராணுவப் பயன்பாட்டுக்கு மட்டும் ‘கென்சீனோ பயோலாஜிக்ஸ்’ தடுப்பூசி மருந்தை சீனா அனுமதித்துள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மில்லியன் பேருக்கு, முதல் 50 மில்லியன் ‘டோஸ்கள்’ ஜனவரி 15ஆம் தேதிக்குள்ளும் அடுத்த 50 மில்லியன் ‘டோஸ்கள்’ பிப்ரவரி 5ஆம் தேதிக்குள்ளும் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, சீனாவின் சிச்சுவான் பகுதியில் வாழும் முதியோரும் மருத்துவ ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஏனையோரும் அடுத்த மாதத் தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இவர்களுக்காக சிச்சுவானில் 118,000 தடுப்பூசி ‘டோஸ்கள்’ வந்து இறங்கியுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தடுப்பூசி போடும் திட்டத்தைப் பொதுமக்களுக்குக் காலவரிசையாகத் தெரிவிக்கும் முதல் மாநிலம் சிச்சுவான்.
கடந்த ஆண்டு இறுதியில் கொரானா கிருமி முதன்முதலில் சீனாவில் பரவத் தொடங்கியது. அதை சீனா பெருமளவு கட்டுப்படுத்திவிட்டாலும் ஆங்காங்கே கிருமிப் பரவல் இருக்கவே செய்கிறது.
இவ்வாறு சிச்சுவான் பகுதியில் அண்மைக் காலமாக கொவிட்-19 தொற்று சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
சீனாவில் குறைந்தது 94,734 பேர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 4,759 பேர் கிருமி பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவித்துள்ளன.