வர்த்தகம் செய்ய ஏதுவான நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடத்தை நியூசிலாந்திடம் இழந்துள்ளது. உலக வங்கி வெளியிட்டுள்ள இந்த ஆக அண்மைய தரவரிசையில் நியூசிலாந்து முதலிடத்தைப் பிடித்திருக்கும்போதிலும் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளால் அந்நாடு பாதிப்படையும் ஆபத்தை இந்தக் கௌரவம் மறைப்பதாக உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கு முன்பு இரண்டாவது இடத்தில் இருந்த நியூசிலாந்து வரி தொடர்பான விஷயங்களில் மேம்பாடு கண்டதால் முதலிடத்துக்கு முன்னேறியதாக உலக வங்கி தெரிவித்தது. நிறுவனங்களை எளிதில் நிறுவ வகை செய்திருப்பதிலும் உலக வங்கியின் குறியீட்டில் நியூசிலாந்து முதலிடம் வகித்தது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட அம்சம் கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கும் குற்றத்தைப் புரிபவர்களுக்குச் சாதகமாக அமையக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.