கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டு இருக்கும் பயணிகள், வருங்காலத்தில் சிங்கப்பூருக்கு திரும்பி வரும்போது அதிக நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை இல்லாமல் போகலாம் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் கருத்து கூறி இருக்கிறார்.
பல அமைச்சுகளை உள்ளடக்கிய கொவிட்-19 சிறப்புப் பணிக்குழுவின் தலைவர்களில் ஒருவரான திரு வோங், சிஎன்ஏவுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.
கொவிட்-19 தடுப்பூசி கிருமிப் பரவலைக் கணிசமாகக் குறைக்கிறது என்பது தெரியவந்தால், அத்தகைய ஊசியைப் போட்டுக்கொண்டு இருப்போர், தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நாட்களை வெகுவாகக் குறைப்பது பற்றி அல்லது அறவே இல்லாமல் செய்வது பற்றி அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.
கொவிட்-19க்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முடிவு செய்வோருக்குக் கிடைக்கக்கூடிய கண்கூடான நன்மைகளில் ஒன்றாக இது இருக்கும் என்றாரவர்.
அந்த ஊசியைப் போட்டுக்கொள்வதால் கொவிட்-19 கிருமி தொற்றாத அளவுக்குப் பாதுகாப்பு அரணை உடலில் ஏற்படுத்திக் கொள்ளலாம்.
தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்பவர்கள், அதிக பரிசோதனைகளுக்கு உட்பட வேண்டி இருக்கும். தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை இருக்கும்.
இதர கூடுதலான நிபந்தனைகளையும் அவர்கள் நிறைவேற்ற வேண்டி இருக்கும் என்று அந்தப் பேட்டியில் அவர் தெரிவித்தார்.
தடுப்பூசி போட்டுக்கொள்வதால் வெளிநாடுகளுக்குப் பல முறை பயணம் செல்வதும் சாத்தியமாகலாம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தடுப்பூசி இல்லாமல் இப்போதுகூட பல சிங்கப்பூரர்கள், இதர பல நாடுகளுக்குத் தாராளமாகச் சென்று வருகிறார்கள்.
அவர்கள் செல்லும் நாடுகளில் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு இல்லை. கிருமித்தொற்று ஒடுக்கப்பட்டுவிட்ட ஒரு நாட்டில் இருந்து வருபவர்கள் என்று அந்த நாடுகள் சிங்கப்பூரர்களைக் கருதுவதே இதற்குக் காரணம் என்று அவர் தெரிவித்தார்.
ஆகையால் தடுப்பூசி நிச்சயம் உதவும் என்று தான் கருதுவதாக அவர் கூறினார்.