இந்தோனீசியப் பணிப்பெண் ஒருவர் தனது முதலாளியின் கையெழுத்தைக் கள்ளத்தனமாக 42 காசோலைகளில் போட்டு $108,315 பணத்தைக் கையாடிய குற்றத்திற்காக அவருக்கு 21 மாதச் சிறைத்தண்டனை நேற்று விதிக்கப்பட்டது. 37 வயது ஆய் டேட்டி என்ற அந்தப் பணிப்பெண் 10 மோசடிக் குற்றங்களை ஒப்புக்கொண்டார். திருவாட்டி யோங் ஃபொங் பெங் என்ற அந்த 68 வயது முதலாளியிடம் ஆய் டேட்டி 13 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015 மே மாதத்தில் அவரது முதலாளியின் வங்கி காசோலைப் புத்தகத்தை அவர் திருடினார். அதன் பின்னர் அவர் காசோலைகளில் தனது முதலாளியின் கையெழுத்தைப்போட்டு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கத் தொடங்கினார். எடுத்த பணத்தை சூதாட்டத்திலும் இந்தோனீசியாவிற்கு அனுப்புவதிலும் செலவு செய்தார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி திருவாட்டி யோங் தனது வங்கியின் கணக்குப் பட்டியலைப் பார்த்து அதிர்ச்சியுற்றார். தனது கணக்கிலிருந்து சந்தேகத்திற்குரிய முறையில் பணம் எடுக்கப்பட்டுள்ளதை உணர்ந்து போலிசில் புகார் அளித்தார். ஆய் டேட்டிக்கு ஒவ்வொரு கையெழுத்து மோசடி குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கலாம்.