வரும் ஞாயிறு நள்ளிரவு அன்று மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழு பரம வைரியான லிவர்பூல் அணியுடன் ஆன்ஃப்பீல்ட் அரங்கில் பொருதவுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஒலோ குனார் சோல்சியார், தமது குழுவுக்கு இங்கிலிஷ் பிரிமியர் லீக்கை கைப்பற்ற தகுதி உள்ளதா என்பதை நிர்ணயிக்கும் ஆட்டமாக அது விளங்கும் என்றார்.
17 ஆட்டங்களில் 36 புள்ளிகளை குவித்து லீக் பட்டியலில் முதலாம் இடத்தை வகிக்கிறது மான்செஸ்டர் யுனைடெட் அணி.
மூன்று புள்ளி வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது லிவர்பூல் அணி.
கடந்த 11 லீக் ஆட்டங்களில் இதுவரையில் தோல்வியை சந்திக்காத மான்செஸ்டர் யுனைடெட் அணி போட்டியின் நடப்பு வெற்றியாளர்களான லிவர்பூல் அணியை வீழ்த்திடக்கூடும் என்று நம்புகிறார்.
“ எங்கேயும் எக்குழுவையும் எங்களால் வீழ்த்திட முடியும் என்று நம்புகிறோம். இதுபோன்ற ஆட்டத்தில் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையுடன் செல்லும்போது அது ஒரு நல்ல உணர்வை தருகிறது,” என்று சோல்சியார் செய்தியாளர்களிடம் கூறினார்.
“ மகுடம் சூடுவதற்கான தகுதி எங்களிடம் உள்ளதா என்பதை சோதிக்கும் ஆட்டம் இது ஏனெனில் லிவர்பூல் அணியை அவர்களது சொந்த அரங்கில் ச ந்திப்பது பெரும் சவாலாகும். குறுகிய கோல் கணக்கில் நிறைய ஆட்டங்களை வென்றிருக்கிறோம், கூடுதல் நேரத்திலும் கோல்கள் சிலவற்றை புகுத்தியுள்ளோம்,” என்று நினைவு கூர்ந்தார் சோல்சியார்.
கடந்த ஏப்ரல் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஆன்ஃப்பீல்ட் அரங்கில் லிவர்பூல் அணி தோல்வி கண்டதில்லை என்றும் இவ்விரு குழுக்களுக்கிடையிலான 10 ஆட்டங்களில் ஒருமுறை மட்டும் யுனைடெட் வென்றுள்ளது என்பதையும் சோல்சியார் உணருகிறார்.
“அதிக முறை உலகமே அண்ணார்ந்து பார்க்கும் விதத்தில் ஆக சிறப்பாக யுனைடெட் விளையாடியதாக இல்லை. ஆன்ஃப்பீல்ட்டில் வெல்ல ஆக சிற ந்த முறையில் விளையாட வேண்டும். லிவர்பூலை விரட்டி துரத்துவதற்கு பதிலாக பட்டியலின் உச்சத்தில் இருந்து புள்ளி வித்தியாசத்தை விரிவாக்க விரும்புகிறேன்.
“ லீக் மகுடத்திற்காக நாங்களும் போட்டியிடுகிறோம். லீக் பருவம் முடிய இன்னும் நீண்ட காலம் உள்ளது ஆனால் இத்தருணத்தில் அனைத்து குழுக்களும் லிவர்பூல் குழுவை வீழ்த்திட விருப்பப்படுவர்,” என்று குறிப்பிட்டார் சாதகமான முடிவை எதிர்பார்க்கும் மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி.