இன்று தொடங்கி இன்னும் ஏழு நாள்களுக்கு தமிழக அரசியலில் திக் திக் பதற்றம் தொடரும் என அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். அரசியல் சதுரங்கத்தில் இப்போது சசிகலாவின் முறை. அவரது காய் நகர்த்தலைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு மாறும் என்னும் நிலையில் வரும் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சசிகலா, 69, விடுதலை ஆகிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. சசிகலாவின் அரசியல் ஆட்டம் ஆரம்பமாகுமா அல்லது அமைதியாகிவிடுமா என்பது இன்னும் ஏழு நாள்களில் தெரிந்துவிடும். அவர் விடுதலை ஆகிறார் என நேற்றுக் காலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாக தமிழக அரசு சார்பில் ஓர் அறிவிப்பு வெளியானது.
ஜெயலலிதா நினைவுமண்டபத்தை அதே 27ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைப்பார் என்பதுதான் அந்த அறிவிப்பு. சசிகலா சிறைக்குச் செல்லுமுன் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்றார். அதேபோல விடுதலை ஆன பின்னரும் அவர் அங்கு செல்வார் என கூறப்பட்டது. அவரது வருகையைத் தடுப்பதற்காக ஜனவரி 27ஆம் தேதியை அதிமுக தலைவர்கள் தேர்ந்தெடுத்தார்களா என்று உறுதியாகத் தெரியவில்லை.
சென்னை மெரினா கடற்கரையில் ஜெயலலிதா நினைவுமண்டபம் மற்றும் அருங்காட்சியகத்திற்கான அடிக்கல்லை 2018 மே 8ஆம் தேதி முதல்வர் பழனிசாமி நாட்டினார். 50 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் ஃபீனிக்ஸ் பறவை போன்ற வித்தியாசமான தோற்றத்தில் இத்தாலி மார்பிள், பளிங்குக்கற்கள் போன்றவற்றால் மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.