சிங்கப்பூரின் பிரதான வங்கிகளில் ஒன்றான டிபிஎஸ், மின்னிலக்கச் சேவைக்கு ‘டோக்கன்’ சாதனத்தை பயன்படுத்தும் முறைக்கு முடிவு கட்டுகிறது.
வரும் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மின்னிலக்கச் சேவைகளைப் பயன்படுத்த ‘டோக்கன்’ சாதனம் தேவையில்லை என்றும் பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து அந்தச் சாதனம் விநியோகிக்கப்படாது என்றும் டிபிஎஸ் அறிவித்துள்ளது.
இதற்கு மாற்றாக வங்கியின் மின்னிலக்க டோக்கன் முறையை பயனீட்டாளர்கள் பயன்படுத்த வேண்டும்.
டிபிஎஸ் வங்கியின் செயலி வழியாக இதனை அமைத்துக் கொள்ள முடியும் என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் டிபிஎஸ் தெரிவித்தது.
அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் உறுதி செய்ய இனி டோக்கன் சாதனம் தேவையில்லை.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே டிபிஎஸ், டோக்கன் சாதனத்துக்கு மாற்றாக மின்னிலக்க டோக்கன் முறையை புகுத்திவந்தது.
இதையடுத்து வங்கியின் பயனீட் டாளர்களில் பெரும்பாலானவர்கள் மின்னிலக்க டோக்கன் முறைக்கு மாறிவிட்டனர் என்று டிபிஎஸ் தெரிவித்தது.