வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்றதற்கு முன்பு வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறினார் முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப்.
புதிய அதிபருக்கு வாழ்த்து தெரிவித்த டிரம்ப், ஏதேனும் ஒரு வழியில் தாம் மீண்டும் வருவது உறுதி என்று சூளுரைத்தார்.
தமது மனைவியுடன் ஃபுளோரிடாவுக்குச் செல்லும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு தமது ஆதரவாளர்களிடம் டிரம்ப் பேசினார்.
“உங்களது அதிபராக இருந்ததைக் கௌரவமாகக் கருதுகிறேன்,” என்றார் அவர்.
அதிபராக இருந்தபோது தாம் பல சாதனைகளைப் படைத்ததாக டிரம்ப் தெரிவித்தார். அதை அவரது ஆதரவாளர்களிடம் அவர் பட்டியலிட்டுக் கூறினார்.
அமெரிக்கர்களுக்குப் பல வேலை வாய்ப்புகளை உருவாக்கியதாகவும் விண்வெளிப் படை ஒன்றை அமைத்ததும், முதியோருக்கு உதவும் வகையில் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதாகவும் கோவிட்-19 தடுப்பூசி கண்டுபிடிப்பை விரைவுபடுத்தியதாகவும் டிரம்ப் கூறினார்.
கொரோனா கிருமித்தொற்றிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும்படி அமெரிக்கர்களை அவர் கேட்டுக்கொண்டார்.
கிருமித்தொற்று காரணமாக துன்புற்றவர்களுக்கு அவர் மரியாதை தெரிவித்துக்கொண்டார்.
தாம் அதிகாரத்தில் இருந்தபோது துணை அதிபராகச் செயல்பட்ட மைக் பென்சுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
திரு ஜோ பைடனின் பதவி ஏற்பு விழாவில் டிரம்ப் கலந்துகொள்ளவில்லை.
1869ஆம் ஆண்டுக்குப் பிறகு தமக்குப் பிறகு அதிபராகும் நபரின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளாத முதல் அதிபராக வரலாற்றில் இடம்பிடித்துள்ளார் டிரம்ப்.
தமது பதவியின் கடைசி சில மணி நேரங்களில் சிறையில் உள்ள 140 பேரை டிரம்ப் மன்னித்து விடுதலை செய்தார். மோசடிக் குற்றத்துக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்ப்பின் முன்னாள் ஆலோசகரும் அவர்களில் ஒருவர்.
அண்மையில் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடத்தில் அத்துமீறி நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
வன்முறையைத் தூண்டியதாகக் கூறி டிரம்ப்பின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.