இம்மாதம் 26ஆம் தேதி முதல், வீடுகளில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் தனிப்பட்ட நபர்கள் எட்டுப் பேரை மட்டுமே அனுமதிக்கலாம் என்று கல்வி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
அதேபோல, முடிந்தவரைக்கும் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் இரண்டு வீடுகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும். சீனப் புத்தாண்டு காலத்தில் குடும்ப உறுப்பினர்களை மட்டுமே பார்க்கச் செல்ல வேண்டும் என்று அமைச்சர் வோங் கூறினார்.
ஆண்டிறுதி விழாக்களுக்குப் பிறகு சமூகத் தொற்று அதிகரித்துள்ளதால் பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையாக்கப்படுகின்றன.
“அதிகமான தொடர்புகள், மனித நடவடிக்கைகளால் எந்த ஒரு தொற்றுநோயையும் பரப்புவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. ஒரு மாதத்திற்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது, சிங்கப்பூரில் பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் நிலைமை மிக விரைவில் மோசமாகக்கூடும். குறிப்பாக சீனப் புத்தாண்டு காலத்தில் அதிக தொடர்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது,” என்று கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலை பணிக்குழுவின் இணைத் தலைவருமான திரு வோங் சொன்னார்.
எட்டுப் பேர் கொண்ட குழுக்களாக மக்கள் வெளியே கூட அனுமதிக்கப்பட்டாலும் சிங்கப்பூரர்கள் தங்கள் சமூக வட்டங்களைச் சிறியதாக வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
உணவு, பானம் உட்கொள்ளாதபோது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதையும் ஒருபோதும் குரல் உயர்த்தக்கூடாது என்பதையும் அவர் நினைவூட்டினார்.
பாரம்பரிய சீனப் புத்தாண்டு விருந்து சடங்கான ‘யூஷெங்’ கின்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதையும் வழக்கமான வாழ்த்தொலிகளை எழுப்பக்கூடாது என்பதையும் மறைமுகமாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காலகட்டத்தில் சோதனை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் தனிமனிதர்கள், வர்த்தக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வோங் எச்சரித்தார்.
கொரோனா இன்னும் உலகெங்கும் தலைவிரித்தாடுகிறது. இதுவரை தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் வெற்றிகண்ட தைவான், ஹாங்காங் போன்ற நாடுகளும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
கடந்த ஆண்டு சீனப் புத்தாண்டிற்குப் பிறகு இங்கு கொவிட் -19 பாதிப்பு எப்படி அதிகரித்தது என்பதை நினைவுகூர்ந்த திரு வோங், அதனால்தான் அவ்வாறு ஏற்படாமல் தவிர்ப்பதற்காவே பணிக்குழு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கிறது என்றும் சொன்னார்.
“இவ்வாண்டில் சீனப் புத்தாண்டு முன்பு போலவே இருக்காது என்பதை ஏற்றுக்கொள்ள மனதளவில் தயார்படுத்திக்கொள்வோம். நமது அன்றாட நடவடிக்கைகள், தொடர்புகள் குறித்து நாம் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும்,” என்று அமைச்சர் வோங் கூறினார்.
ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கொரோனா பரவும் வாய்ப்பைக் குறைப்பதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் என்று அவர் குறிப்பிட்டார்.
உணவுக் கடைக்காரர்கள், உணவக ஊழியர்கள், கடை உரிமையாளர்கள், சைனாடவுனிலும் சுற்று வட்டாரத்திலும் செயல்படும் உணவு விநியோக ஊழியர்கள் ஆகியோருக்காக இருநாள் கண்காணிப்புச் சோதனை நடவடிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.