கிருமிப் பரவல் நிலவரம் மோசமடைந்து வருவதைத் தொடர்ந்து பல்லாயிரம் மக்களை முடக்கி வைக்க ஹாங்காங் தயாராகி வருவதாக உள்ளூர் ஊடகச் செய்தி ஒன்று நேற்று தெரிவித்தது. முடக்கம் இந்த வார இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாள் கூறியது.
முக்கிய நகர மாவட்டமான கொவ்லூன் முடக்கப்படும்போது யாவ் சிம் மொங்க் வட்டாரத்தைச் சுற்றியுள்ள 150க்கும் மேற்பட்ட குடியிருப்புக் கட்டடங்களும் அதனுள் அடங்கும். எனவே, முடக்கம் அறிவிக்கப்பட்ட பின்னர் 4,000 முதல் 9,000 வரையிலான குடியிருப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றது அச்செய்தி. குறைந்த வருமானக் குடும்பங்கள் நிறைந்த பகுதி என்பதோடு பழமையான கட்டடங்கள் பல அந்த வட்டாரத்தில் உள்ளன.
இவை அத்தனையும் கட்டாய கிருமிப் பரிசோதனை வட்டாரத்திற்குள் இன்று அல்லது நாளை கொண்டு வரப்பட இருப்பதாகச் செய்தி வெளியானாலும் அரசாங்கத் தரப்பினர் கருத்துத் தெரிவிக்க மறுத்து வருகின்றனர்.