ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று ஆண் குழந்தைகள் குளத்தில் விழுந்து இறந்தன.
கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த திருப்பெயர் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன்-மல்லிகா தம்பதிக்கு விவேகன் என்ற மகன் உண்டு. மல்லிகாவின் சகோதரி மணிமேகலை இலங்கியனுரில் வசித்து வந்தார். சில நாள்களுக்கு முன், தங்கையைப் பார்க்க திருப்பெயர் கிராமத்துக்கு தன் இரட்டையர் மகன்களான விக்னேஷ், சர்வேசுடன் மணிமேகலை சென்றிருந்தார்.
திங்களன்று மாலை 5 மணியளவில் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த விக்னேஷ், சர்வேஷ், விவேகன் ஆகிய மூன்று குழந்தைகளையும் நீண்ட நேரமாகியும் காணவில்லை. இதுகுறித்து வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
வீட்டின் அருகில் உள்ள சின்னேரி குளத்தின் கரையில் சிறுவர்கள் நடந்து சென்ற கால்தடங்கள் பதிந்து இருப்பதாக போலிசுக்குத் தகவல் கிடைத்தது. இதனால், குழந்தைகள் குளத்தில் விழுந்து இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் தீயணைப்பு வீரர்கள் இரவிலேயே தேடுதல் பணியைத் தொடங்கினார்.
நீண்ட நேரத் தேடுதலுக்குப் பிறகு நள்ளிரவு 12 மணியளவில் விக்னேஷ், சர்வேஷ் ஆகியோரின் சடலங்களை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
விவேகனின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. இதனால், கடலூரிலிருந்து பேரிடர் மீட்புக் குழு வரவழைக்கப்பட்டது.
அக்குழுவினர் நேற்று காலை 7 மணியளவில் குளத்தில் இறங்கி படகு மூலம் தேடி விவேகனின் சடலத்தை மீட்டனர்.
சடலமாக மீட்கப்பட்ட மூன்று குழந்தைகள் உடலையும் வேப்பூர் போலிசார் உடற்கூராய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.