வண்ணமயமான லிட்டில் இந்தியாவை மேலும் மெருகூட்டியுள்ளது ‘ஆர்ட்வாக் லிட்டில் இந்தியா’. வருடாந்திர கலைவிழா கொண்டாட்டமான இது, சிங்கப்பூர் கலை வாரத்தையொட்டி ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
லாசால் கலைப் பள்ளி, சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம், லிஷா எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து நடத்திய இந்தக் கலைவிழா ‘பேசேஜ் ஆஃப் டைம்’ (Passage of time) எனும் கருப்பொருளைக் கொண்டது.
விழாவில் முத்தாய்ப்பாக விளங்கியது லிட்டில் இந்தியா சுவர்களை அலங்கரித்த அழகுமிகு சுவரோவியங்கள். இந்த ஆண்டு மக்கள் பார்த்து ரசிக்க மொத்தம் நான்கு சுவரோவியங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
ரோச்சோ எம்ஆர்டி நிலையத்தில் இருந்து சுவரோவியக் கண்காட்சி தொடங்குகிறது. 50 டன்லப் ஸ்ட்ரீட்டில் மித்ரா ஜீவானந்தனின் ‘விளக்கு பிபி’ என்னும் விசித்திரமான கலைப்படைப்பைக் காண முடியும். இது இந்திய எண்ணெய் விளக்கை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதுமை படைப்பு. இருளை நீக்கி ஒளியைக் கூட்டுவதைக் கருவாகக் கொண்ட மித்ராவின் படைப்பு, இந்த மந்தமான கிருமித்தொற்று காலத்தில் லிட்டில் இந்தியாவுக்கு உற்சாக வண்ணங்கள் சேர்த்து மேலும் உயிரூட்டும் நோக்கில் உருவாக்கப்பட்டது.
லிட்டில் இந்தியாவில் பிராட்வே ஹோட்டலின் முகப்பில் ஏழு மாடி உயரத்தில் நிற்கும் சிங்கப்பூரின் மிக உயரமான சுவரோவியங்களில் ஒன்றான ‘டான்சிங் இன் யூனிசன்’ (Dancing in Unison) படைப்பும் இந்தக் கலைவிழாவின் சிறப்பு அம்சம்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இந்தியாவின் பஜ்ஜு ஷியாம், சிங்கப்பூரை சேர்ந்த நகர்ப்புறக் கலைஞர் சாம் லோ ஆகியோர் இணைந்து படைத்துள்ள இது, தனித்துவம் பெற்றது. ‘மனிதர்களான நாம் இயற்கையையும் சுற்றுச்சூழலையும் மதிக்க வேண்டும். சிரமமான காலங்களில் நாம் இயற்கையுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு அதுவே உத்தரவாதம் அளிக்கும்’ என்ற கருத்தை உள்ளடக்கியது அந்த ஓவியம்.
இந்த ஓவியத்தில் கோண்ட் கலையில் ஒரு பகுதியான மரத்தை சித்திரிக்கிறது. பூமியில் நிலத்திலிருந்து காற்றுவரை அனைத்தும் ஒன்றல்ல பல வகைகளில் இணைக்கப்பட்டவை என்பதைக் காட்டுகிறது. சுதந்திரத்தின் அடையாளமாக கிளைகளின் மீது அமர்ந்திருக்கும் வண்ண வண்ணச் சிட்டுக்குருவிகள் திகழ்கின்றன.