சென்னை: தமிழகத்தில் ஸிக்கா கிருமி இதுவரை கண்டறியப்பட வில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்தக் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். "ஸிக்கா கிருமி நம் நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தும், அந்நோயைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகத் தமிழகத்தில் ஸிக்கா கிருமி பரவ வாய்ப்பு அறவே இல்லை. தமிழகத்தில் உள்ள துறைமுகம், விமானநிலையம் ஆகிய இடங்களில், ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு நோய் அறிகுறிகள் உள்ளனவா எனப் பரிசோதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஸிக்கா கிருமி குறித்து பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை," என்று விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்துள்ளார்.