ஆஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வரத் தொடங்கின
பிரஸ்ஸல்ஸ்: ஆஸ்ட்ரசெனிகா நிறுவனம் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வந்துசேர்ந்துள்ளன.
அந்நிறுவனத்தின் முதல் தொகுதி தடுப்பூசிகள் நேற்று முன்தினம் பிரான்சுக்கு வந்துசேர்ந்ததைத் தொடர்ந்து சுகாதாரப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடும் பணியை அந்நாடு நேற்று தொடங்கியது.
ஜெர்மனி, அயர்லாந்து, ஸ்பெயின், ஆஸ்திரியா உள்ளிட்ட நாடுகளும் தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கியுள்ளன. போர்ச்சுகலில் தடுப்பூசிகள் அடுத்த வாரம் வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடுப்பூசி விவகாரம் தொடர்பில் ஆஸ்ட்ரசெனிகா நிறுவனத்துடன் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த சில வாரங்களாக மோதலில் ஈடுபட்டு வந்தது.
தற்போது அந்நிறுவனத்தின் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வரும் வேளையிலும், அவற்றைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என்பதால் அரசாங்கங்கள் தொடர்ந்து கவலைப்படுகின்றன. ஐரோப்பாவில் தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் நோய்த்தொற்றால் உயிரிழக்கின்றனர். புதுவகை கொரோனா கிருமி உருவெடுப்பதால் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் தொடர்ந்து முடக்கநிலையை நடப்பில் வைத்துள்ளன.
இந்நிலையில், ஜெர்மானியப் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் மாநில அரசாங்கத் தலைவர்களும் அடுத்த வாரம் சந்திக்கும்போது அந்நாட்டில் கொவிட்-19 கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நடமாட்டக் கட்டுப்பாடுகளை கிரீஸ் நேற்று முன்தினம் கடுமையாக்கியது. பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசித் திட்டம் மெதுவாகச் செயல்பட்டு வருவதாக தடுப்பூசிப் பணிகளைக் கண்காணிக்கும் புளும்பெர்க் நிறுவனம் தெரிவிக்கிறது.
ஐரோப்பாவில் தடுப்பூசித் திட்டம் மெதுவாக தொடங்கினாலும் கோடைக்காலம் முடிவடைவதற்குள் பெரியவர் மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி போட்டு முடிக்க ஐரோப்பிய ஆணையம் திட்டமிட்டுள்ளது.
எதிர்வரும் மாதங்களில் தடுப்பூசித் திட்டம் வேகமெடுக்கும் என்று அது எதிர்பார்க்கிறது. இவ்வாண்டு இரண்டாம் காலாண்டில் குறைந்து 300 மில்லியன் தடுப்பூசிகளை விநியோகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.