கிருஷ்ணகிரி: சொத்துக்குவிப்பு வழக்கில் தனது தண்டனைக் காலம் முடிந்து, ராகு காலத்துக்கு முன்பாக பச்சை நிற புடவையுடன் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் வி.கே.சசிகலா.
அப்போது, கிருஷ்ணகிரி சுங்கச் சாவடியில் சசிகலாவை வரவேற்ப தற்காக வந்த கார்களில் இரண்டு கார்களில் தீப்பற்றியது.
இந்த காருக்குள் பட்டாசுகள் இருந்ததால், பட்டாசு வெடிக்கும் போது அதிலிருந்து கிளம்பிய தீப்பொறி பட்டு காரில் தீ பரவியதாகக் கூறப்படுகிறது.
அதன்பின்னர், தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
“சசிகலாவை வரவேற்க வழிநெடுகிலும் பட்டாசுகள் வெடிக்க அமமுகவினர் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பட்டாசுகள் ஏற்றப்பட்டிருந்த காரில், சாலையில் வெடிக்கப்பட்ட பட்டாசின் தீப்பொறி பட்டு தீவிபத்து நேரிட்டதால், அருகருகே இருந்த இரண்டு கார்கள் எரிந்து சேதமடைந்தன,” என்று முதற்கட்ட விசாரணை குறித்து போலிசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குப் புறப்பட்ட சசிகலா ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்திவிட்டு, அதிமுக கொடியை வெற்றிக் கொடிபோல் தனது காரில் பறக்க விட்டபடி நேற்று காலையில் வந்துகொண்டிருந்தார்.
இதையடுத்து காரில் உள்ள அதிமுக கொடியைப் போலிசார் அகற்றிய நிலையில், சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட வேறு ஒரு காரில் பயணம் செய்தார்.
இந்நிலையில், கிருஷ்ணகிரி எல்லையில் அவரது காரை போலிசார் தடுத்து நிறுத்தினர்.
பின்னர், சசிகலா செல்லும் காரில் அதிமுக கொடி இருப்பது சட்டப்படி குற்றம் என்று கூறி கிருஷ்ணகிரி ஏடிஎஸ்பி சக்திவேல், சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் நோட்டீஸ் ஒன்றை அளித்தார். ஆனாலும், காரில் இருந்த கொடி அகற்றப்படவில்லை.
அதன்பின்னர், இரு கார்களும் தீப்பிடித்து எரிந்த நிலையில், மிகக்குறைந்த அளவிலான கார்கள் மட்டுமே சசிகலாவைப் பின்தொடர்ந்து செல்லும் வகையில் அவரது பயணம் தொடர்ந்தது.
நேற்று காலையில் இருந்தே தமிழகம் ஒருபக்கம் ஒருவிதமான பரபரப்பான சூழ்நிலையிலும் மறுபக்கம் பதற்றமான சூழ்நிலையிலும் இருந்து வந்தது.
அமமுகவின் தொண்டர்கள் உற்சாகமாகவும் அதிமுகவினர் சற்று பதற்றத்திலும் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
திமுக நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஒருவர் பெங்களூருவில் இருந்து புறப்பட்டுவிட்டார். இனி நடக்கவேண்டியது எல்லாம் தானாகவே நடக்கும்,’’ என்று தெரிவித்தார்.