ஹோட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமை உத்தரவை நிறைவேற்ற வேண்டிய நிலையில், இலங்கையைச் சேர்ந்த சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தன் அறையை விட்டு பலமுறை வெளியேறினார். விக்டோரியா ஸ்திரீட் ஹோட்டலின் 13வது மாடியில் தங்கியிருந்த 20 வயது திரு நிஷாட் மணில்கா டி ஃபோன்செக்கா, சென்ற ஆகஸ்ட் மாதத்தில் தன் அறையிலிருந்து பலமுறை வெளியேறி அதே மாடியில் தங்கியிருந்த ஒரு பெண் நண்பரின் அறைக்குச் சென்றார்.
பாதுகாவல் அதிகாரி ஒருவர் வந்து சோதனையிட்டதில் அவர் சிக்கிக்கொண்டார்.
இரண்டு நாட்கள் கழித்து திரு நிஷாட் தன் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
தனிமை உத்தரவை மீறியதற்காகத் தான் சந்திக்கவிருக்கும் விளைவுகளை எண்ணி திரு நிஷாட் தன் உயிரை மாய்த்திருக்கக்கூடும் என்று புலன்விசாரணை அதிகாரி நேற்று நீதிமன்றத்தில் கூறினார்.
அறையை விட்டு வெளியேறியது தொடர்பில் பல்கலைக்கழகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் தமக்கு எழுத்துபூர்வ விளக்கம் வேண்டும் என்று இறந்தவரிடம் பல்கலைக்கழகம் கேட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.