தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று மத்தியில் ஆளும் பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாக கவனிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
அதிமுகவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலைச் சந்திக்கப்போவதாக உறுதி அளித்து இருக்கும் அந்தக் கட்சியின் முக்கியமான தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக விரைவில் தமிழ்நாட்டுக்கு வந்து பல்வேறு இடங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் இதர பல நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்துக் கொள்ளப்போவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பாஜக பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் தமிழ்நாடு வந்து பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
இந்த நிலையில், கோவையில் இம்மாதம் 25ஆம் தேதி நடக்கஇருக்கும் அதிமுக பிரசார தொடக்கவிழா கூட்டத்தில் மோடி கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அவரைத் தொடர்ந்து பாஜக தேசிய தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா பிப்ரவரி 28ஆம் தேதி நீலகிரி அல்லது விழுப்புரத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதனிடையே, இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வருகிறார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை தமிழகம் வருகிறார் என்றும் தொடர்ந்து பாஜகவின் இதர தேசிய தலைவர்களும் தமிழகம் வருவார்கள் என்றும் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
பாஜக தலைவர் ஜே. பி. நட்டா மாநிலத்தில் தொடர்ந்து பல்வேறு கூட்டங்களிலும் பங்கெடுத்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.