மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தார்.
கடந்த 9ஆம் தேதி நேப்பிடாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, போலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெண் உட்பட இருவர் தலையில் பலத்த காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து தலையில் குண்டு தாக்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்தப் பெண் நேற்று மாண்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மாண்ட முதல் நபர் இவர்.
உயிரிழந்த பெண் மியா த்வே த்வே கைங் எனும் 20 வயது மாணவி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இழப்பு மிகவும் வருத்தமாக உள்ளதாக அவரது சகோதரர் யே ஹூட் ஆங் தெரிவித்துள்ளார்.
பெண்ணிற்குக் காயம் ஏற்பட்டதற்கு ரப்பர் குண்டு காரணம் அல்ல, உண்மையான குண்டே காரணம் என்று மருத்துவர் கூறுகின்றனர்.
எனினும், போலிசாரின் அடக்குமுறைக்கு மத்தியிலும் மியன்மார் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து வலுத்து வருகின்றன.
இதற்கிடையே, மியன்மாரின் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடா, பிரிட்டன் விதித்துள்ள தடைகளை ராணுவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் வரவேற்றுள்ளனர்.
மேலும் ஜப்பான், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மியன்மாரில் ஜனநாயகம் மீண்டும் மலர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.