கிருமித்தொற்று விளைவித்த பாதிப்புகளால் கடந்த ஆண்டு நாம் நினைத்துக்கூட பார்த்திராத அளவிற்கு நம்மைச் சுற்றி பலவும் இணையம் வழி மெய் நிகர் பாணியில் நிகழ்த்தப்பட்டன. அதில் மேடை நாடக படைப்புகளும் ஒன்று. இணையம் வழி படைக்கப்படும் மேடை நாடகங்களில், மேடை நாடகச் சாரம் என்பதை சிறிதளவு இழந்து விடுகிறோம். நாடகத்தை நேரில் பார்த்து ரசிக்கும் உணர்வுக்கு ஈடாகாது. இதற்கு தீர்வாக அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ஒரு புதிய முயற்சியை அறிமுகப்படுத்தியுள்ளது அகம் நாடக அமைப்பு.
மேடை நாடகத்தை நாம் பார்த்து ரசிக்கும் விதத்தில் புதுமையை புகுத்தி இதிகாச இலக்கியங்களில் மிக முக்கியமான படைப்பான மகாபாரதத்தின் துரி யோதனன் கதாபாத்திரத்தை முப்பரிமாண மெய்நிகர் வடிவில் நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளது அகம் நாடக அமைப்பு.
சிங்கப்பூர் தமிழ் நாடகத் துறை வரலாற்றின் முதல் முப்பரிமாண மெய்நிகர் முயற்சியான இது வால்யூமெட்ரிக் கேப்ச்சர் (Volumetric Capture) என்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டு, ஆக்மென்டெட் ரியாலிட்டி (Augmented reality)/ வெர்ச்சுவல் ரியாலிட்டி (Virtual reality) வடிவில் படைக்கப்படுகிறது.
“இந்தப் படைப்பு பல திறமை வாய்ந்த உள்ளூர் கலைஞர்களின் ஒருமித்த கனவும் கடின உழைப்பையும் கொண்டது. மேடை நாடகத்தின் எதிர்காலத்தில் தொழில்நுட்பம் எவ்வித பங்கை ஆற்றலாம் என்பதற்கான ஓர் ஆராய்ச்சியாகத்தான் இந்தத் தயாரிப்பைத் தொடங்கினோம். மின்னிலக்க உலகம், முப்பரிமாண உலகம், நாம் இருக்கும் உலகம், இவற்றை ஒருங்கிணைத்து பார்வையாளர்கள் வீட்டிலிருந்தவாறே நாடக உலகிற்குள் நுழையும் ஓர் அனுபவத்தை வழங்கும் ஒரு முயற்சிதான் இது,” என்றார் நாடகத்தின் இயக்குநரும் நிர்வாக தயாரிப்பாளருமான திரு சுப்ரமணியம் கணேஷ்.
துரியோதனன் நாடகத்தின் ஆரம்பம், துரியோதனனின் அரண்மனை முகப்பில் தொடங்குகிறது. அங்கு துரியோதனனின் கதாயுதம், சகுனியின் பகடை ஆட்டப் பலகை, கர்ணனின் கவசம் ஆகிய பொருட்களின் பின் அடங்கியுள்ள கதையைத் துரியோதனனின் குரல் விளக்குகிறது. அடுத்த காட்சியில் போர் முடிந்து ஓய்ந்த சூழலில் துரியோதனனாகக் கம்பீரமாக தோற்றம் தருகிறார் சிங்கப்பூரின் பிரபல முன்னணி மேடை நாடகக் கலைஞர் திரு ரெ.சோமசுந்தரம்.
இந்த நாடகத்தில், இந்திய இதிகாச வரலாற்றில் மிகக் கொடூரமான வில்லனாக துரியோதனன் தனது கண்ணோட்டத்தையும் நியாயத்தையும் விளக்குகிறார். நினைவில் நிற்கும் அழாகான வசனங்களை எழுதி இந்த மெய்நிகர் தமிழ் நாடக அனுபவத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார் நாடகத்தின் கதாசிரியர், பிரபலமான மேடை நாடக எழுத்தாளர் டாக்டர் இளவழகன்.
“இப்படைப்பில் என் எழுத்து இடம்பெற்றிருப்பது மகிழ்வாகவும், பெருமையாகவும் உள்ளது. மேடை நாடகத்தின் அடுத்தக்கட்ட பயணத்தில் இது ஒரு முக்கிய கட்டம். மூன்று மணி நேரத்திற்கான கதை, வசனத்தைச் சுருக்கி மூன்று நிமிட ‘மாதிரிச் சுருக்கமாக’ குறைத்து, அதற்குள் துரியோதனனின் கதாபாத்திரத்திற்கான நியாயத்தை, தமிழின் தேனினிமை தேயாது விளக்க வேண்டும் எனும்நோக்கத்தில் இவ்வரிகள் இயற்றப்பட்டன,” என்றார் இளவழகன்.
தயாரிப்பின் தொடக்கவிழா இம்மாதம் 20ஆம் தேதி சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தில் நடைபெற்றது. விழாவில் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங் கலந்துகொண்டார்.
இந்நாடகத்தை ‘துரியோதனன்’ எனும் இலவச செயலி வழி காணலாம். VR கருவிகளை வைத்திருப்பவர்கள் நாடக காட்சிக்குள் சென்று மின்னிலக்க முறையில் நேரடியாக காண்பது போன்ற ஓர் உணர்வை அனுபவிக்கலாம்.