கடந்த எட்டு மாத காலத்தில் இங்குள்ள 60க்கும் மேற்பட்ட பலதுறை மருந்தகங்களிலும் நோய்க்குறி கண்காணிப்பு (சென்டினல்) பொது மருந்தகங்களிலும் ஒருவர்கூட சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக உறுதிசெய்யப்படவில்லை.
தொற்றுப் பரவல் சாத்தியங்களைக் கண்காணிக்கவும் சளிக்காய்ச்சல் கிருமிகளின் தடமறியவும் இந்தப் பலதுறை மருந்தகங்களையும் பொது மருந்தகங்களையும் சுகாதார அமைச்சு பயன்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஏப்ரலில் நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பிற்கு வருவதற்கு முன்னரும் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகமாவதற்கு முன்பும், கடந்த பத்தாண்டுகளில் ஆய்வகச் சோதனைகள் மூலம் சளிக்காய்ச்சல் பாதிப்பு உறுதிப்படுத்தப்படாத மாதமே இல்லை.
அம்மருந்தகங்கள் சளிக்காய்ச்சல் பாதிப்பு இருப்பதுபோலத் தோன்றும் நோயாளிகளிடம் இருந்து மாதிரிகளைச் சேகரித்து, தேசிய பொதுச் சுகாதார ஆய்வகத்திற்குச் சோதனைக்கு அனுப்பும்.
கடைசியாக, சென்ற ஆண்டு மே மாதத்தில் ‘ஏ’ வகை சளிக்காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் வாராந்திர தொற்றுநோய்கள் சஞ்சிகை தெரிவிக்கிறது.
“கண்காணிப்புத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து, இந்த அளவிற்குச் சளிக்காய்ச்சல் நிலவரம் குறைந்திருப்பது இதுவே முதன்முறை,” என்று அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
2020 ஜனவரியில் 320 பேரைச் சளிக்காய்ச்சல் கிருமி தொற்றியது உறுதிசெய்யப்பட்டதாக அந்தச் சஞ்சிகை குறிப்பிட்டுள்ளது. குளிர்காலத்தில் சளிக்காய்ச்சல் கிருமி அதிகமாகப் பரவும் என்பதே அதற்குக் காரணம் எனச் சொல்லப்பட்டது.
மாறாக, இவ்வாண்டு ஜனவரியில் சளிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதுபோல தோன்றிய 231 பேரின் மாதிரிகளைச் சோதித்ததில் அவர்களில் ஒருவரையும் சளிக்காய்ச்சல் கிருமி தொற்றவில்லை எனத் தெரியவந்தது.
இருப்பினும், மாதத்திற்கு 200-250 மாதிரிகள் சோதிக்கப்படுவது தொடரும் என்று அப்பேச்சாளர் கூறினார்.
பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்னும் நடப்பிலிருக்கும் நிலையில், கடந்தாண்டு அதிகமானோர் சளிக்காய்ச்சல் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டதும் சளிக்காய்ச்சல் பாதிப்பு சரிந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவப் பயிலகத்தின் தொற்றுநோய் மருத்துவர்கள் பிரிவின் தலைவர் டாக்டர் அசோக் குருப் குறிப்பிட்டார்.
மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாததால் பலவகை கிருமிகள் இங்கு நுழைவதற்குச் சாத்தியமில்லாமல் போனதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆண்டிறுதிப் பயணங்கள் பெரிதும் குறைந்ததால் சளிக்காய்ச்சல் மற்றும் பிற சுவாசக் கோளாறு தொடர்பான கிருமிகள் வருவது குறைந்திருக்கலாம் என்பதை என்யுஎஸ் சா சுவீ ஹாக் மருத்துவப் பள்ளியின் இணைப் பேராசிரியர் சு லியாங்கும் ஒப்புக்கொண்டார்.
சளிக்காய்ச்சலுக்கும் கொரோனா தொற்றுக்கும் காய்ச்சல், சோர்வு, இருமல் போன்ற பொதுவான அறிகுறிகள் இருப்பதால் கடந்த ஆண்டு பொதுமக்கள் சளிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி வலியுறுத்தப்பட்டனர்.
சிங்கப்பூரிலும் உலகளவிலும் சளிக்காய்ச்சல் பாதிப்பு வெகுவாகக் குறைந்திருப்பதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் சொன்னார்.
ஆயினும், “எல்லைகள் திறக்கப்படுவதாலும் பொருளியல், சமூக நடவடிக்கைகள் படிப்படியாகத் தொடங்குவதாலும் பொதுமக்களில் ஒருவருக்கொருவர் இடையிலான தொடர்புகளும் அதிகரிக்கும். ஆகையால், சளிக்காய்ச்சல் நிலவரம் குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம்,” என்றார் அவர்.
நல்ல சுகாதாரப் பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பதை, முகக்கவசம் அணிவதைத் தொடரும்படியும் உடல்நிலை சரியில்லை எனில் மருத்துவரை நாடுமாறும் அவ்வேளைகளில் கிருமி பரவும் சாத்தியத்தைக் குறைக்க பள்ளிக்கு அல்லது பணிக்குச் செல்லாமல் இருக்குமாறும் பொதுமக்களை அமைச்சு வலியுறுத்தி இருக்கிறது.