பிளாஸ்டிக் போத்தல்கள், அலு மினிய பானக் கலன்கள் ஆகியவற்றைக் கொடுத்து, அவற்றுக்குப் பதிலாக பற்றுச்சீட்டுகளை வழங்கும் வகையில் ஜூரோங்கில் அதிகமான மறுசுழற்சி விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படும்.
ஒவ்வொரு 40 கலன்களுக்கும் அல்லது 25 போத்தல்களுக்கும் 550 கிராப் வெகுமதிப் புள்ளிகள் வழங்கப்படும். இதைக் கொண்டு கிராப் டாக்சி பயணத்தில் அல்லது கிராப் உணவு விநியோகச் சேவையில் $1 கழிவு பெறலாம்.
அத்துடன், ஒவ்வொரு 50 கலன்களுக்கும் அல்லது 32 போத்தல்களுக்கும் ‘ஓம்’ மின்விநியோக நிறுவனம் வழங்கும் $30 மதிப்புடைய பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.
தேசிய சுற்றுப்புற வாரியமும் ‘எஃப் அண்ட் என் ஃபுட்ஸ்’ நிறுவனமும் இணைந்து 2019 அக்டோபர் முதல் 2020 ஜூன் வரை தீவு முழுவதும் 50 மறுசுழற்சி விற்பனை இயந்திரங்களை நிறுவின. அதன் விரிவாக்கமாக ஜூரோங் வட்டாரத்தில் அத்தகைய இயந்திரங்கள் வைக்கப்படவுள்ளன.
யூஹுவா உணவு நிலையத்தில் நேற்றுக் காலை நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, இந்த வெகுமதித் திட்டம் மக்களை ஊக்குவிக்கும் என்றார்.
“இந்தத் திட்டம் வெற்றிபெறும் பட்சத்தில், மற்ற வட்டாரங்களிலும் இதை மேற்கொள்ள ஊக்குவிக்கலாம். அப்படிச் செய்வதன்மூலம் மறுசுழற்சி வசதிகளை வீடுகளுக்கும் கடைகளுக்கும் அருகில் கொண்டுசெல்ல முடியும்,” என்று திருவாட்டி ஃபூ சொன்னார்.
யூஹுவா உணவு நிலையம், பைனியர் கடைத்தொகுதி, சிங்கப்பூர் அறிவியல் நிலையம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் மறுசுழற்சி விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படும். மற்ற இரு இடங்கள் எவை என்பது பின்னர் தெரிவிக்கப்படும்.
இம்மாத இறுதிக்குள் அந்த ஐந்து இயந்திரங்களும் நிறுவப்பட்டுவிடும் என எதிர்பார்ப்பதாக கழிவு மேலாண்மை நிறுவனமான ‘அல்பா டபிள்யூ அண்ட் எச்’ தெரிவித்தது.
ஜூரோங் வட்டாரத்தில் ஏழு ஆண்டுகளுக்குக் கழிவு சேகரிக்கும் ஒப்பந்தம் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
“சிங்கப்பூரில் மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவ்விகிதத்தை அதிகப்படுத்துவதே எங்களது இலக்கு. அடுத்த சில ஆண்டுகளில் இங்கு அதிகளவில் மறுசுழற்சி விற்பனை இயந்திரங்களை நிறுவ விரும்புகிறோம்,” என்றார் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஜேக்கப் லேம்ஸ்டார்ஃப்.
பானக் கலன்களைப் போட்ட பிறகு, பற்றுச்சீட்டு மதிப்பைப் பெற இயந்திரத்தில் தோன்றும் விரைவுத் தகவல் (கியூஆர்) குறியீட்டை ஒரு கைபேசிச் செயலி கொண்டு வருட வேண்டும்.
பொருள்களை முறையாக மறுசுழற்சி செய்யும்படி மக்களை ஊக்குவிக்க, இயந்திரங்களை வைக்க சரியான இடங்களைக் கண்டறிய வேண்டியது முக்கியம் என அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.
“பயனீட்டாளர்களுக்கும் சேகரிப்பாளர்களுக்கும் தோதான இடமாகத் திகழ வேண்டும்,” என்றார் திருவாட்டி ஃபூ.
கலன்களிலும் போத்தல்களிலும் எதுவும் எஞ்சியிராதபடி, பயனீட்டாளர்கள் அவற்றைச் சுத்தம் செய்தபின் இயந்திரத்தினுள் போடுவர் என நம்புவதாகவும் அவர் சொன்னார்.