இந்து இளங்கோவன்
கொவிட்-19 கிருமித்தொற்று அனைவரையும் வீட்டிலேயே முடக்கி வைத்தபோதும், காலம் கடத்தாமல் மூன்று சகோதரர்கள் வீட்டிலிருந்தே இணையம் வழியான மசாலா தூள் வியாபாரத்தை தொடங்கிவிட்டனர்.
ருசியான, ஆரோக்கியமான உணவுக்குத் தரமான மசாலா தூள் கலவை அவசியம் எனத் தன் பாட்டி தன்னுடைய தாயாரிடம் அடிக்கடி கூறுவார் என்று நினைவுகூர்ந்தார் 20 வயது கீர்த்தனா ஜெய்காந்த். தன்னுடைய தம்பி ஜவஹரி ஜெய்காந்த் (17), தங்கை லாவண்யா ஜெய்காந்த் (15) ஆகியோருடன் இனைந்து 'ஸ்பைஸ் கல்ச்சர்' என்ற இணைய வர்த்தகத்தை கீர்த்தனா நடத்தி வருகிறார்.
"எங்கள் அம்மா எப்போதும் தாமே தயாரித்த மசாலா பொருட்களைக் கொண்டு எங்களுக்குப் பலவிதமான கறி வகைகளைச் சமைத்துத் தருவார். வீட்டிலேயே இந்த மசாலா கலவைகளைத் தயார் செய்யும் முறையை அவர் எங்கள் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டார்.
"சிங்கப்பூர் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே சிறந்த மசாலா கலவைகளைத் தயாரிக்கத் தேவைப்படும் தரமான பொருட்களை வாங்க செம்பவாங்கிலிருந்து சிராங்கூன் சாலைக்குச் சென்றதாக அடிக்கடி கூறுவார்," என்றார் கீர்த்தனா.
கீர்த்தனா, சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர். ஜவஹரி தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியிலும் லாவண்யா சிங்கப்பூர் ஸ்போர்ட்ஸ் பள்ளியிலும் பயின்று வருகின்றனர்.
பள்ளி வேலைகளுக்கிடையே வாரஇறுதி நாட்களில் இவர்கள் ஒன்றுகூடி வியாபாரத்திற்கான பணிகளில் தீவிரமாக இறங்கிடுவர். இதை ஒரு வியாபாரம் என்று மட்டும் கருதாமல் தம்பி தங்கையுடன் நெருக்கமான பிணைப்பை ஏற்படுத்தும் ஒரு நல்ல வாய்ப்பாக இதைக் கருதுவதாக கூறினார் கீர்த்தனா.
"சென்ற ஆண்டு கிருமித்தொற்று அதிகமாக இருந்த காலத்தில் நாங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனாலும், எங்கள் தாயார் வேலை காரணமாக அலுவலகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
அதனால் எங்களின் மதிய உணவை நாங்களே தயார் செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்தோம். கறி சமைப்பதற்குத் தேவையான மசாலா கலவையை முன்பே தயார்செய்து வைத்துவிட்டு வேலைக்குச் செல்லுமாறு அம்மாவிடம் கேட்டுக்கொண்டோம்," என்றார்.
அம்மா செய்து வைத்த மசாலா கலவையைக் கொண்டு உணவை எளிதாகவும் விரைவாகவும் சமைக்க முடிவதை கீர்த்தனா உணர்ந்தார்.
தன்னைப் போல் வீட்டிலேயே எளிய முறையில் கறி சமைக்க விரும்புவோர், தங்களின் மசாலா கலவையை வாங்கலாம் என்றெண்ணி சகோதரர்களுடன் வியாபாரத்தைத் தொடங்கினார்.
"சமையலை முடிந்தவரை எளிதாகச் செய்வதே எங்கள் இலக்காக இருந்தது. அதனால் நாங்கள் பல படிகளைக் குறைத்து மிக சுலபமான சமையல் தயாரிப்பு முறையை நாடினோம். முன்பே தயாரிக்கப்பட்ட மசாலா கலவை என்றாலும் சுவையும் ஆரோக்கியமும் குறைந்துவிடவில்லை.
"எங்கள் மசாலா கலவையை '3 in 1' திடீர் காபி போல் நினைத்துப் பாருங்கள். விருப்பமான இறைச்சி அல்லது காய்கறிகள், ஒரு வெங்காயம், ஒரு தக்காளி ஆகியவற்றுடன் எங்களது மசாலா கலவை. இவற்றைக் கொண்டு சமையல் தெரியாதோர் கூட ருசியான கறி சமைத்துவிடலாம்," என்றார் கீர்த்தனா.
இளையர்களைக் கவரும் புதுமையான மாம்பழ இறால் கறி மசாலா கலவை, மசாலா டீ கலவை போன்றவற்றையும் 'ஸ்பைஸ் கல்ச்சர்' விற்பனை செய்துவருகிறது.