டான் டோக் செங் மருத்துவமனை குழுமத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40க்கு உயர்வு
சிங்கப்பூரில் இன்று (மே 4ஆம் தேதி) நண்பகல் நிலவரப்படி 17 பேருக்கு புதிதாக கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இதன் மூலம் இங்கு இதுவரை பதிவான தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 61,252 ஆனது.
புதிய 17 பேரில் ஐவர் சமூகத்தொற்றுக்கு ஆளானவர்கள்.
டான் டோக் செங் மருத்துவமனை நோயாளிகள், ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் இவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தோர், தனிமையில் வைக்கப்பட்டோர் போன்றோரிடம் நடத்தப்பட்ட தீவிர பரிசோதனையில் இந்த ஐவரிடமும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இவர்களையும் சேர்த்து டான் டோக் செங் தொற்றுக் குழுமத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40க்கு அதிகரித்து உள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஒன்பது கிருமித்தொற்று குழுமங்களில் இதுவே ஆகப்பெரியதாக உருவெடுத்து உள்ளது.
திங்கட்கிழமை மருத்துவமனையின் 9டி வார்டில் எட்டுப் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த வார்டில்தான் கடந்த வாரம், முதல் கிருமித்தொற்று சம்பவம் பதிவானது. இந்த எட்டுப் பேரிடமும் தொற்று இல்லை என இதற்கு முன்பு நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் அடுத்தக்கட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் சுகாதார அமைச்சு கூறியது.
மேலும், இந்த எட்டுப் பேரில் ஐவர் அங்கு ஏற்கெனவே சிகிச்சையில் இருந்த நோயாளிகள். அவர்கள் 53 வயதுக்கும் 94 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
சமூகத்தில் கடந்த வாரம் 60 பேருக்கு புதிததாக கிருமித்தொற்றியதாக திங்கட்கிழமை அமைச்சு அறிவித்தது.
இதற்கு முந்திய வாரத்தில் பதிவான சமூகத்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை பத்து.
சமூகத்தொற்றுகள் தவிர நேற்று உறுதி செய்யப்பட்ட இதர 12 பேரும் வெளிநாடுகளில் இருந்து வந்து கட்டாயத் தனிமை உத்தரவின்கீழ் வைக்கப்பட்டவர்கள்.