சென்னை: கொரோனா கிருமிப் பரவலைத் தடுத்து நிறுத்த புதிதாகப் பதவி ஏற்ற ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அடுத்தடுத்து அதிரடிப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை வியாசர்பாடியிலுள்ள அம்பேத்கர் கலைக்கல்லூரியில் சித்த மருத்துவம் அளிக்கும் சித்தா கொவிட் சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை மா. சுப்பிரமணியம் நேற்று தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 240 படுக்கைகளுடன் கூடிய இந்த மையத்தில் 195 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தமிழகத்தில் தற்போது 12 இடங்களில் சித்தா கொவிட் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் இன்னும் ஒரு வாரத்திற்குள் கூடுதலாக 12 மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
சுக்குக் கஞ்சி, கபசுர குடிநீர்
இந்த சிகிச்சை மையங்களில் சுக்குக் கஞ்சி, கபசுர குடிநீர், கற்பூராதி தைலம் உள்ளிட்ட மருந்துகள் மற்றும் சிறப்புப் பாரம்பரிய உணவுகள் நோயாளிகளுக்கு தரப்
படுவதாகக் கூறிய அமைச்சர், சித்தா யோகாசனப் பயிற்சி, திருமூலர் பிராணாயாமம், மூலிகை சிகிச்சை, மனநல ஆலோசனை உள்ளிட்டவையும் வழங்கப்படுவதாகத் தெரிவித்தார்.
இது தவிர, கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் இன்று (மே 10) முதல் வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியம் கூறினார். களப்பணியாளர்கள் எந்தெந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்கள் என்ற விவரம் ஒவ்வொரு நாளும் மாலையில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவத்தின் மூலம் பலரும் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளதாகத் தெரிவித்தார். சென்னையில் 21 பரிசோதனை மையங்கள் உள்ள நிலையில் மக்கள் தேவையினை கருத்தில் கொண்டு அந்த எண்ணிக்கையை 30ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
இதற்கிடையே, கொரோனா தடுப்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக கட்டளை மையம் ஒன்று அமைக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.
இப்படி ஒரு மையம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். அதன்படி கட்டளை மையம் அமைக்கப்பட்டு அதற்கான அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில், "கொரோனா கட்டளை மையத்திற்கு ஒருங்கிணைப்பாளராக தாரேஷ் அகமத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கட்டளை மையத்தின் செயல்பாடு, தரம் குறித்து ஆய்வுசெய்ய அழகுமீனா என்ற அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இக்குழுவில் ஐஏஎஸ் அதிகாரிகள் நந்தகுமார், எஸ்.உமா, எஸ்.வினீத், கே.பி. கார்த்திகேயன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்," என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் 104 என்ற எண் மூலம் கட்டளை மையத்தை மக்கள் தொடர்புகொள்ளலாம் என்றும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இருப்பு மற்றும் படுக்கையின் எண்ணிக்கைகளை தெரிந்துகொள்ளலாம் என்றும் அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
சித்த மருத்துவ சிகிச்சை மையம்; கொரோனா கட்டளை மையம்; 11,000 களப்பணியாளர்