நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் கலிஃபோர்னியா பல்கலைக் கழகமும் இணைந்து நடத்தும் ஆய்வுத் திட்டத்தில் தொலை இயக்கியால் ஒரு வண்டின் அசைவுகளைக் கட்டுப்படுத்தும் முறையை இணையவாசிகள் சிலர் விலங்கு வதை என்று கூறி தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். 'சைபோர்க் பீட்டல்' எனும் இந்தக் கூட்டுத் திட்டம் பற்றிய தகவல் முதலில் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதில் ஒரு வண்டின் மேல் மைக்ரோசிப் எனும் நுண் சில்லைப் பொருத்தி, அதன் உடலுக்குள் மின்முனையை நுழைத்து அதன் மூலம் அனுப்பப்படும் மின்சாரத்தின் மூலம் வண்டின் அசைவுகளை இயக்க முடியும். இந்தத் திட்டத்தின் காணொளி அமெரிக்காவின் இணைய சஞ்சிகையில் இம்மாதம் 1ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டதிலிருந்து அதற்கு நேற்று முன்தினம் வரை 22,000க்கும் மேற்பட்ட பகிர்வுகளும் 2,800 கருத்துகளும் கிடைத்துள்ளன.
அதில் ஒரு கருத்தைத் தெரிவித்த இயற்கை சங்கத்தின் தொண்டூழியரான டாக்டர் அனுஜ் ஜெயின், "இதே தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நாம் ஒரு நாள் பெரிய விலங்குக ளையும் மனிதர்களையும் கட்டுப்படுத்தப்போகிறோமா?" என்று வினவினார். இதற்கிடையே, 'பீட்டல்' எனப்படும் வண்டினம், விலங்குகள் மற்றும் பறவைகள் சட்டத்துக்கு உட்பட்டவை அல்ல என்றும் இத்தகைய வண்டுகளை இறக்குமதி செய்ய தாங்கம் அனுமதித்ததாகவும் வேளாண் உணவு கால்நடை மருத்துவ ஆணையத்தின் பேச்சாளர் கூறினார். 2016-12-09 06:00:00 +0800