கொரோனா கிருமித்தொற்றைத் துடைத்தொழிக்கும் மாபெரும் பணியில் அரும்பாடு பட்டு வரும் சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளின் முன்களப் பணியாளர்களுக்கு நன்றி கூறும் வகையில், ஹவ்காங் இந்தியர் நற்பணிச் செயற்குழு இம்மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
அன்றைய தினம் சிங்கப்பூர் நேரப்படி மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை சிங்கப்பூரிலிருந்து ஆறு பாடகர்கள், இந்தியாவிலிருந்து ஆறு பாடகர்கள் என மொத்தம் 12 பாடகர்கள் ஸூம் தளம் வழி பங்கேற்று, தமிழ், இந்தி பாடல்களைப் பாடினார்கள்.
இந்த நிகழ்ச்சியை சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளிலிருந்தும் சுமார் 100 பேர் கண்டு களித்தனர் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
"இந்தச் சிரமமான காலத்தில் தங்கள் பங்கை செலுத்திக்கொண்டிருக்கும் முன்களப் பணியாளர் களுக்கு நன்றி கூற விரும்பினோம்.
"இங்கு வசிக்கும் மக்களுக்கு இந்தியாவிலும், இந்தியாவில் வசிக்கும் மக்களுக்கு சிங்கப்பூரிலும் முன்களப் பணியாளர்களாகப் பங்காற்றிவரும் உறவினர்களும் நண்பர்களும் இருக்கிறார்கள்.
அவர்களின் அர்ப்பணிப்புக்கு எங்கள் நன்றியைத் தெரிவிக்க இந்தப் பாடல் நிகழ்ச்சி ஒரு சிறந்த தளமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம்," என்றார் ஹவ்காங் இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் தலைவர் திரு ராஜமோகன்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய ஹவ்காங் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகர் திரு லீ ஹோங் சுவாங், "இரு நாடுகளின் மக்கள் ஒன்றிணைந்து பரிவு பற்றிய செய்தியைப் பரப்ப, இந்தத் தளம் உறுதுணையாக இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். கொரோனா கிருமித்தொற்றின் பாதிப்பைக் குறைக்க முக்கிய படி, தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான்.
"ஆகவே, சிங்கப்பூர் இந்தியா ஆகியவற்றின் மக்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வது சிறந்த பலனை அளிக்கும். அதனால் உங்களுக்கு மட்டுமல்லாமல் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும்," என்று தெரிவித்தார்.