கொவிட்-19 தொற்றால் உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு மில்லியனைத் தாண்டிவிட்டது.
அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா பாதிப்பும் அதனால் ஏற்படும் இறப்பும் குறைந்து வருகின்றன.
ஆனால், உருமாறிய 'டெல்டா' கிருமி பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், பல நாடுகளிலும் தடுப்பூசிப் பற்றாக்குறை நிலவுகிறது.
கொரோனா மரண எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்ற மைல்கல்லை எட்ட ஓர் ஆண்டுக்குமேல் ஆன நிலையில், 166 நாள்களிலேயே அதனால் மேலும் இரண்டு மில்லியன் பேர் மரணமடைந்துவிட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் பகுப்பாய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா, மெக்சிகோ ஆகிய நாடுகள் கொரோனா மரணப் பட்டியலில் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. கிருமித்தொற்றால் மாண்டோரில் கிட்டத்தட்ட பாதிப் பேர் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள்.
ஆயினும், மக்கள்தொகையைப் பொறுத்தமட்டில், பெரு, ஹங்கேரி, போஸ்னியா, செக் குடியரசு, ஜிப்ரால்டர் ஆகிய நாடுகளில் இறப்பு விகிதம் அதிகமாகவுள்ளது.
கடந்த மார்ச் மாதம் முதல் லத்தீன் அமெரிக்க நாடுகளில் கிருமிப் பரவல் மோசமாக இருந்து வருகிறது. உலகில் கொரோனா தொற்றிய 100 பேரில் 43 பேர் அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள். அதே போல, இறப்பு விகிதத்திலும் பத்தில் ஒன்பது இடங்களை அந்த நாடுகளே பிடித்துள்ளன.
இந்நிலையில், அதிகாரபூர்வ மரண எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகச் சுகாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். உலக சுகாதார நிறுவனமும் கொரோனா மரணம் இன்னும் அதிகமாக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது.