ஜெனீவா: கொரோனா கிருமிப் பரவலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தளர்த்துவது குறித்து உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
வேகமாக பரவக்கூடிய உருமாறிய வகை கிருமி பரவிக் கொண்டிருக்கும் நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களும் தொடர்ந்து முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என்றும் கிருமிப் பரவலைத் தடுக்கக்கூடிய பிற நடவடிக்கைகளையும் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
"முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகும், தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை
களைக் கடைப்பிடியுங்கள். ஏனெனில் நீங்கள் உண்மையில் முழுமையாக பாதுகாக்கப்படாமல் இருக்கலாம்," என்றார் சுகாதார அமைப்பின் மூத்த ஆலோசகரான டாக்டர் புரூஸ் அய்ல்வர்ட்.
அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் முழுமையாக தடுப்பூசி போட்ட அமெரிக்கர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியதில்லை என்றும் மே மாதம் கூறி
இருந்தது.
ஆனால் சுகாதார அமைப்பின் இந்த எச்சரிக்கை குறித்து கேட்டபோது தனது வழிகாட்டுதல்களில் எந்த மாற்றமும் இல்லை என்று நோய் கட்டுப்பாட்டு மையம் சூசகமாக கூறியது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கிருமி, தற்போது குறைந்தது 85 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், கடந்த இரண்டு வாரங்களில் கிருமித்தொற்றின் பாதிப்பு இரட்டிப்பாகியுள்ளது. ஒவ்வொரு ஐந்து கிருமித்தொற்று சம்பவங்களில் ஒன்றுக்கு டெல்டா வகை கிருமித்தொற்று காரணமாக உள்ளது.