பிராக்: விம்பிள்டன் பொது விருதுப் பட்டத்தை இருமுறை வென்றுள்ள செக் குடியரசு நாட்டு டென்னிஸ் வீராங்கனை பெட்ரா குவிட்டோவா, 26 (படம்,) குறைந்தது அடுத்த மூன்று மாத காலத் திற்கு விளையாட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். பிரோஸ்டயோவ் நகரில் உள்ள அவரது வீட்டில் நேற்று முன்தினம் திடீரென நுழைந்தான் கொள்ளையன். அவனது கொள்ளை முயற்சியைத் தடுக்க முயன்ற போது குவிட்டோவின் இடது கையை அவன் கையிலிருந்த கத்தி பதம்பார்த்தது.
அதன் பிறகு அங்கிருந்த 5,000 செக் கொருனா (S$278) பணத்தை எடுத்துக் கொண்டு கொள்ளையன் ஓடிவிட்டான். குவிட்டோவின் இடக்கையில் ஐந்து விரல்களிலும் இரு நரம்புகளிலும் வெட்டுப்பட்டு இருந்ததால் மருத்துவர்கள் தையல் போட்டு, அறுவை சிகிச்சையை முடிக்க சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் ஆனது. இதையடுத்து, குறைந்தது அடுத்த மூன்று மாதங்களுக்கு அவர் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்து வர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.