சிட்னி: தொடர்ந்து மூன்று வாரங்களாக கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரித்து வருவதால் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டுப்பாடுகளின்படி கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதோடு, அத்தியாவசியமற்ற சில்லறை வர்த்தகங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சூப்பர் மார்க்கெட்டுகள், மருந்தகங்கள் திறந்திருக்கும்.
மேலும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வர கட்டாயப்படுத்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கிருமித்தொற்று நிலவரம் மிகவும் மோசமாக உள்ள மேற்கு பகுதியில் மக்கள் வேலைக்காக வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
துப்புரவு, பராமரிப்பு மற்றும் வீட்டு சீரமைப்பு உள்ளிட்ட அனைத்து கட்டட வேலைகளும் வரும் 30ஆம் தேதி வரை நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிரேட்டர் சிட்னி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலிஸ் கெடுபிடி அதிகரிக்கும் என்று நியூ சவுத் வேல்ஸ் மாநில போலிசார் கூறினர்.
நேற்றைக்கு முந்திய 24 மணி நேரத்தில் அங்கு 111 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதற்கு முந்தைய நாள் இது 97ஆக இருந்தது. நியூ சவுத் வேல்ஸில் நேற்று ஒருவர் தொற்றால் மாண்டுவிட்டார்.
ஜூன் 26ஆம் தேதி முதல் சிட்னியில் இருக்கும் முடக்கநிலை வரும் 30ஆம் தேதி நடப்பில் இருக்கும்.