வெஸ்ட்ஹேம்: இங்கிலிஷ் எஃப்ஏ கிண்ணக் காற்பந்துப் போட்டியின் நான்காவது சுற்று விளையாட்டில் நேற்று அதிகாலை வெஸ்ட்ஹேம் குழுவும் லிவர்பூல் குழுவும் மோதின. ஆட்டத்தின் வழக்கமான நேரத்தில் இரு குழுக்களும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை கண்டன. ஆனால், கூடுதல் நேரத்தில் கடைசி நிமிடத்தில் வெஸ்ட்ஹேம் குழுவின் ஒக்போனா மேலும் ஒரு கோல் போட்டு 2-1 என வெற்றி வாகை சூடி லிவர்பூல் குழுவின் எஃப்ஏ கிண்ணக் கனவைக் கலைத்தது. நேற்றைய ஆட்டத்தில் மிகவும் வலுவான ஆட்டக்காரர்களை வெஸ்ட்ஹேம் களமிறக்க அதை எதிர்த்துப் போட்டியிட்ட லிவர்பூல் குழுவோ இளம் ஆட்டக்காரர்கள் மீது தனது நம்பிக்கையை வைத்தது. அவர்களும் லிவர்பூல் நிர்வாகி யகர்ன் க்ளோப்பின் நம்பிக்கையை வீணாக்காமல் விளையாடினர்.
ஆனால், இறுதியில் வெஸ்ட் ஹேமின் ஒக்போனா போட்ட கோலால் லிவர்பூல் தோல்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றில் வெஸ்ட்ஹேம் குழு பிளாக்பர்ன் குழுவுடன் இம் மாதம் 21 ஆம் தேதி மோதும். இங்கிலிஷ் பிரிமியர் லீக் தரவரிசைப் பட்டியலின் முதல் நான்கு இடங்களில் வருவதைக் காட்டிலும் எஃப்ஏ கிண்ணத்தை வெல்வதையே தாம் பெரிதாகக் கருதுவதாக இந்தப் போட்டி ஆரம்பிக்குமுன் வெஸ்ட்ஹேம் நிர்வாகி ஸ்லாவன் பிளீச் கூறினார். இந்தப் போட்டி இதற்கு முன் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இரு குழுக்களும் 0=0 என்று விறுவிறுப்பற்ற முறையில் ஆடியதுபோல் இல்லாமல் இரு குழுக்களுக்கும் நிறைய கோல் போடும் வாய்ப்புகள் இருந்தன.