தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கையில் தமிழக தொல்லியல் துறை சார்பில், அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொற்கையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் பழமையான ஏழடுக்கு செங்கல் கட்டுமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொற்கையில் 75 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி மீண்டும் அகழாய்வுப் பணி தொடங்கியுள்ளது.
கொற்கை ஊரின் மையப்பகுதியில் 17 குழிகள் அமைக்கப்பட்டு, அகழாய்வு இயக்குநர் தங்கதுரை தலைமையில் நான்கு மாத காலமாக இப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த அகழாய்வுப்பணியில் பண்டைய தமிழர்களின் நாகரிகத்தை வெளிக்கொணரும் வகையில் பழமையான பொருட்கள் பலவற்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். அவற்றில் கடந்த வாரம், திரவத்தை வடிகட்டும் நான்கடுக்குகளைக் கொண்ட சுடு மண்குழாய் ஒன்றை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்போது, இன்னொரு குழியில் இருந்து, ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, சங்க காலத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஏழடுக்குச் செங்கல் கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து அதேகுழியில் இரும்பு, உருக்கு, கண்ணாடி மணிகள் மற்றும் வாழ்விடப் பகுதிகளை உறுதிப்படுத்துவதற்கான அமைப்புகளும் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இங்கு செப்டம்பர் வரை ஆய்வு நடைபெறும்.
இதற்கு முன்னர் சிவகளையில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வின்போது, ஏராளமான பழங்கால முதுமக்கள் தாழிகள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. சிவகளை பகுதியில் மட்டும் இதுவரை 29 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கொந்தகை அகழாய்வில் அருகருகே முதுமக்கள் தாழி, இறுதிச்சடங்குக்கு பயன்படுத்திய பானை கண்டெடுக்கப்பட்டுள்ளன.